கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்
From Wikipedia, the free encyclopedia
கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் (Protestant Reformation) 1517 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது மார்டின் லூதருடன் தொடங்கி 1648 ஆம் ஆண்டின் வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தத்துடன் முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது[1][2]. இவ்வியக்கம், கத்தோலிக்கத் திருச்சபையை சீர்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. மேற்குலக கத்தோலிக்கர்கள், சிலவேளைகளில் திருத்தந்தை வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிலவிய ஒழுக்கக் கேடுகளாலும், சமயக் கோட்பாடுகளில் திரிபுகள், திணிப்புகள் செய்யப்பட்டன என்று கருதியதாலும் விரக்தியுற்றிருந்தனர். முக்கியமாக, பலன்கள் வழங்குவதில் நடந்த முறைகேடுகளினாலும், சபையின் முக்கிய பதவிகளைப் பணம் கொடுத்துப் பெறலாம் என்னும் பழக்கமும்(சீமோனி) மார்டின் லூதர் சீர்திருத்த இயக்கம் தொடங்க உடனடிக் காரணங்களாக அமைந்தன.
சீர்திருத்தத் திருச்சபையினை துவக்கத்தில் ஜான் விக்கிலிஃப், ஜேன் ஹஸ், மார்ட்டின் லூதர், ஜான் கால்வின் முதலியவர்கள் முன் நின்று நடத்தினர். கறுப்புச் சாவு, மேற்கு சமயப்பிளவு முதலியவற்றால் கிறித்தவத்தின் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறையத்துடங்கிய நேரத்தில் இது நிகழ்ந்ததால் பலரின் ஆதரவு கிடைக்க வழிவகுத்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகள் பரவ அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு பெரிதும் உதவியதும், பைசாந்தியப் பேரரசின் வீழ்ச்சியும் பிறகாரணிகளாம்.
கத்தோலிக்க மறுமலர்ச்சி என்பது இவ்வியகத்துக்கான கத்தோலிக்க திருச்சபையின் பதில் ஆகும்.[2] முதல் சீர்திருத்த திருச்சபைகள் 15ஆம் நூற்றாண்டில் தோன்றத்துவங்கின. இவற்றுள் பெரியது லூதரனியம் ஆகும். இது பெருவாரியாக செருனனியின் பால்டிக் சுகாண்டினேவியன் மக்களிடம் புகழ்பெற்றிருந்தது.