மலை அரண்மனை, திரிப்பூணித்துறா
கேரள அரண்மனை / From Wikipedia, the free encyclopedia
மலை அரண்மனை எனப்படுகின்ற ஹில் பேலஸ் (Hill Palace) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொச்சியின் திருப்பூணித்துறையில் அமைந்துள்ள மிகப் பெரிய தொல்லியல் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் கொச்சி இராச்சிய மகாராஜா அரசின் நிர்வாக அலுவலகம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லமாகச் செயல்பட்டு வந்தது. 1865 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை வளாகத்தில் 54 ஏக்கர்கள் (220,000 m2) பரப்பளவில் பாரம்பரிய பாணியில் கட்டபட்ட 49 கட்டிடங்கள் உள்ளன. இந்த வளாகத்தில் ஒரு தொல்லியல் அருங்காட்சியகம், ஒரு பாரம்பரிய அருங்காட்சியகம், மான் பூங்கா, வரலாற்று காலத்திற்கு முந்தைய பொருட்கள் கொண்ட பூங்கா, குழந்தைகள் பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. [1] அருங்காட்சியகத்தின் வளாகத்தில் பல அரிய வகை மருத்துவத் தாவரங்கள் உள்ளன. தற்போது இந்த அரண்மனை கேரள மாநில தொல்லியல் துறையால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை நகரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) தொலைவில் அமைந்துள்ளது. சாலை மற்றும் இரயில் பாதை வழியாக இந்த அருங்காட்சியகத்திற்குச் செல்லலாம்.
அரண்மனையின் நுழைவாயில் | |
நிறுவப்பட்டது | 1865 |
---|---|
அமைவிடம் | , திரிப்பூணித்துறை, கொச்சி, இந்தியா |
வகை | தொல்லியல் அருங்காட்சியகம், பாரம்பரிய அருங்காட்சியகம் |
உரிமையாளர் | கேரள அரசு |
பொது போக்குவரத்து அணுகல் | சாலை, ரயில் |
கேரள அரசின் பாரம்பரிய விவகாரங்கள் துறையால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனமான பாரம்பரிய ஆய்வு மையம் (சிஎச்எஸ்) இந்த வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. பாரம்பரிய ஆய்வு மையமானது 'கையெழுத்துப் பிரதி பாதுகாப்பு மையம்' (எம்.சி.சி) மற்றும் கையெழுத்துப் பிரதி ஆதார மையம் (எம்.ஆர்.சி) என்ற வகையில் இந்தியச் சுவடிகள் இயக்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டு, செயல்பட்டு வருகிறது. [2]