பாரத ரத்னா
From Wikipedia, the free encyclopedia
இந்திய மாமணி[1] (பாரத ரத்னா) இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டிப் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு(2013) மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது. எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும், இவ்விருதைப் பெரும் வகையில் நவம்பர், 2011-இல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.[2] இவ்விருது பெற்றவர்களுக்குச் சிறப்புப் பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் முன்னுரிமை வரிசை பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இந்திய மாமணி பாரத ரத்னா | |
---|---|
வகை | குடியியல் விருது |
நாடு | இந்தியா |
வழங்குபவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
நாடா | |
முகப்பு | அரச மர இலையில், சூரியனின் உருவமும், "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரி எழுத்துகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும். |
பின்புறம் | அரச மர இலையில், தேசிய சின்னமும், "சத்தியமேவா ஜெயதே" (உண்மை மட்டும் வெற்றி பெறுகிறது) என்ற சொல் தேவநாகரி எழுத்துகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும். |
நிறுவப்பட்டது | 1954; 70 ஆண்டுகளுக்கு முன்னர் (1954) |
முதலில் வழங்கப்பட்டது | 1954 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2024
|
மொத்தம் | 48 |
முன்னுரிமை | |
அடுத்தது (உயர்ந்த) | ஒன்றுமில்லை |
அடுத்தது (குறைந்த) | பத்ம விபூசண் |
இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துகளும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்துக் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.
1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955-ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது. அதன் பின் பத்து பேர்களுக்கு அவர்களின் மறைவிற்கு பின் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது இந்தியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்படாவிட்டாலும், அவ்வாறே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980) இவ்விருது வழங்கப்பட்டது. இவரைத்தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கப்பார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992-இல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்குப் பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாகத் திரும்பப் பெறப்பட்டது.