யுகோசுலாவியா
From Wikipedia, the free encyclopedia
யுகோசுலாவியா (Yugoslavia) என்பது தென்கிழக்கு, நடு ஐரோப்பா பகுதியில் 1918 முதல் 1992 வரை இருந்த ஒரு நாடு ஆகும். இது 1918 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து, "செர்பிய, குரோவாசிய, சிலோவீனிய இராச்சியம்" என்ற பெயரில், செர்பியா இராச்சியம், (முன்னாள் ஆத்திரியா-அங்கேரியில் இருந்து உருவான) தற்காலிக மாநிலமான சுலோவீனிய, குரோவாசிய, செர்பியா பிரதேசங்களில் இருந்து உருவாக்கப்பட்டது.[6] உதுமானியப் பேரரசு, ஆத்திரியா-அங்கேரி ஆகியவற்றின் கீழ் பல நூற்றாண்டுகளாக இருந்த வெளிநாட்டு ஆட்சியைத் தொடர்ந்து தெற்கு சிலாவிக் மக்களின் முதல் ஒன்றியத்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அமைத்தது. செர்பியாவின் முதலாம் பீட்டர் மன்னர் அதன் முதல் இறையாண்மை கொண்ட தலைவர் ஆவார். 1922 சூலை 13 அன்று பாரிசில் நடந்த தூதர்கள் மாநாட்டில் இந்த இராச்சியம் பன்னாட்டு அங்கீகாரத்தைப் பெற்றது.[7] நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் யுகோசுலாவிய இராச்சியம் என 1929 அக்டோபர் 3 இல் மாற்றப்பட்டது.
யுகோசுலாவியா Yugoslavia Jugoslavija Југославија | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1918–1992 1941–1945: அச்சு நாடுகளின் ஆக்கிரமிப்பு | |||||||||||||||||||||||||
நாட்டுப்பண்: (1919–1941), "ஏய், சிலாவுகள்" (1945–1992) | |||||||||||||||||||||||||
தலைநகரம் | பெல்கிறேட் 44°49′N 20°27′E | ||||||||||||||||||||||||
பெரிய நகர் | தலைநகர் | ||||||||||||||||||||||||
ஆட்சி மொழி(கள்) | செர்பிய-குரோவாசிய-சுலோவீனிய மொழிகள் (1944 இற்கு முன்) செருபோகுரோவாசிய மொழி (1944 முதல்) | ||||||||||||||||||||||||
மக்கள் | யுகோசுலாவ் | ||||||||||||||||||||||||
அரசாங்கம் | மரபுவழி முடியாட்சி (1918–1941) கூட்டாட்சிக் குடியரசு (1945–1992) தகவல்கள்
| ||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||
• அமைப்பு | 1 திசம்பர் 1918 | ||||||||||||||||||||||||
6 ஏப்ரல் 1941 | |||||||||||||||||||||||||
24 அக்டோபர் 1945 | |||||||||||||||||||||||||
• முடியாட்சி ஒழிப்பு | 29 நவம்பர் 1945 | ||||||||||||||||||||||||
• கலைப்பு | 27 ஏப்ரல் 1992 | ||||||||||||||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||||||||||||||
• 1955 | 17,522,438[1] | ||||||||||||||||||||||||
• 1965 | 19,489,605[2] | ||||||||||||||||||||||||
• 1975 | 21,441,297[3] | ||||||||||||||||||||||||
• 1985 | 23,121,383[4] | ||||||||||||||||||||||||
• 1991 | 23,532,279[5] | ||||||||||||||||||||||||
நாணயம் | யுகோசுலாவ் தினார் | ||||||||||||||||||||||||
அழைப்புக்குறி | 38 | ||||||||||||||||||||||||
இணையக் குறி | .yu | ||||||||||||||||||||||||
|
1941 ஏப்ரல் 6 அன்று அச்சு நாடுகளினால் இந்நாடு படையெடுக்கப்பட்டது. 1943-இல், ஒரு "யுகோசுலாவிய சனநாயகக் கூட்டாட்சி" அரசு சார்பு எதிர்ப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது. 1944-ஆம் ஆண்டில், பின்னர் நாடுகடத்தப்பட்ட இரண்டாம் பீட்டர் மன்னர், அதை முறையான அரசாங்கமாக அங்கீகரித்தார். நவம்பர் 1945 இல் ஒரு கம்யூனிச அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முடியாட்சி ஒழிக்கப்பட்டதை அடுத்து, அந்நாடு "யுகோசுலாவியக் கூட்டாட்சி மக்கள் குடியரசு" என மறுபெயரிடப்பட்டது. இது இத்தாலியிடமிருந்து இசுத்திரியா, ரிசேக்கா, சாதர் பிரதேசங்களைக் கைப்பற்றியது. சார்பாளர்களின் தலைவர் யோசிப் டீட்டோ 1944 முதல் பிரதமராகவும் பின்னர் 1980 இல் அவர் இறக்கும் வரை அரசுத்தலைவராகவும் நாட்டை ஆட்சி செய்தார். 1963-இல், நாடு கடைசித் தடவையாக "யுகோசுலாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு" என மறுபெயரிடப்பட்டது.
சோசலிசக் கூட்டாசிக் குடியரசை உருவாக்கிய ஆறு தொகுதி குடியரசுகள் பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, மக்கெதோனியா, மொண்டெனேகுரோ, செர்பியா, சுலோவீனியா ஆகிய சோசலிசக் குடியரசுகளாகும். செர்பிய சோசலிசக் குடியரசு கொசோவோ, வொய்வொதீனா ஆகிய இரண்டு சோசலிசத் தன்னாட்சி மாகாணங்களைக் கொண்டிருந்தது, அவை 1974-இற்குப் பிறகு கூட்டமைப்பின் மற்ற உறுப்பினர்களுக்கு சமமாக இருந்தன.[8][9] 1980களில் பொருளாதார, அரசியல் நெருக்கடி, தேசியவாத, இன மோதல்களின் எழுச்சிக்குப் பிறகு, யுகோசுலாவியா அதன் குடியரசுகளின் எல்லைகளில் முதலில் ஐந்து நாடுகளாக உடைந்து, யுகோசுலாவியப் போர்களுக்கு வழிவகுத்தது. 1993 முதல் 2017 வரை, முன்னாள் யுகோசுலாவியாவிற்கான பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயம், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் அந்தப் போர்களின் போது செய்யப்பட்ட பிற குற்றங்களுக்காக முன்னாள் யுகோசுலாவிய அரசியல், இராணுவத் தலைவர்களை விசாரணை செய்தது.
இவ்வாறு பிரிந்த பிறகு, மொண்டெனேகுரோ, செர்பியக் குடியரசுகள் யுகோசுலாவியக் கூட்டாட்சிக் குடியரசு என்ற பெயரில் (2003 முதல் 2006 வரை செர்பியாவும் மொண்டெனேகுரோவும் என அறியப்பட்டது) உருவாக்கின. இந்த மாநிலம் யுகோசுலாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசுக்கு ஒரே சட்டப்பூர்வ வாரிசு என்ற நிலையை அடைய விரும்பியது, ஆனால் அந்தக் கோரிக்கைகளை மற்ற முன்னாள் குடியரசுகள் எதிர்த்தன. இறுதியில், அது பகிரப்பட்ட வாரிசு[10] என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு, 2003-இல் அதன் அதிகாரப்பூர்வ பெயர் செர்பியாவும் மொண்டெனேகுரோவும் என மாற்றப்பட்டது. 2006-இல் செர்பியாவும் மொண்டெனேகுரோவும் சுதந்திர நாடுகளாக மாறியபோது இந்த மாநிலம் கலைக்கப்பட்டது. கொசோவோ 2008 இல் அதன் விடுதலையை அறிவித்தது.