பிரான்சின் முதலாம் நெப்போலியன்
From Wikipedia, the free encyclopedia
நெப்போலியன் பொனபார்ட் (Napoléon Bonaparte, 15 ஆகஸ்ட் 1769 – 5 மே 1821) அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவராகவும், அரசியல் தலைவராகவும் இருந்தவர். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவருடைய தாக்கம் மிகமிக குறிப்பிடத்தக்கது. இவர் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளர், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னர், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளர், ரைன் கூட்டாட்சியின் காப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.[1]
முதலாம் நெப்போலியன் Napoléon I | |||||
---|---|---|---|---|---|
பிரான்சின் பேரரசன் இத்தாலியின் மன்னன் சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன் ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் | |||||
நெப்போலியன் தனது படிப்பகத்தில், ஜாக்-லூயி டேவிட் 1812 இல் வரைந்தது | |||||
ஆட்சி | மார்ச் 20, 1804–ஏப்ரல் 6, 1814 மார்ச் 1, 1815–ஜூன் 22, 1815 | ||||
முடிசூட்டு விழா | டிசம்பர் 2, 1804 | ||||
முன்னிருந்தவர் | பிரெஞ்சு கொன்சுலேட் முன்னைய அரசன்: பதினாறாம் லூயி (இ. 1793) | ||||
பின்வந்தவர் | நடப்பின் படி பதினெட்டாம் லூயி De Jure நெப்போலியன் II | ||||
அரசி | ஜோசெஃபின் டெ பியூஹார்னை மரீ லூயி | ||||
வாரிசு(கள்) | நெப்போலியன் II | ||||
| |||||
மரபு | பொனபார்ட் | ||||
தந்தை | கார்லோ பொனபார்ட் | ||||
தாய் | லெற்றீசியா ரமோலினோ | ||||
அடக்கம் | பாரிஸ் |
கோர்சிக்காவில் பிறந்த இவர், பிரான்ஸில் கனரக ஆயுதங்களுக்கான அலுவலராகப் பயிற்சி பெற்றார். பிரெஞ்சுப் புரட்சியின் தளபதியாக, பிரான்சுக்கு எதிரான முதலாம் கூட்டணி மற்றும் இரண்டாம் கூட்டணிகளுக்கு எதிரான போர்களை வழிநடத்தியதன் மூலம் இவர் முன்னணிக்கு வந்தார். 1799 ஆம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தி அதன்மூலம் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சல் ஆகப் பதவியில் அமர்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் பேரரசனானார். 19 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தார்.[2] தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவர் ஐரோப்பாக் கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தார். தனது நெருங்கிய நண்பர்களையும், உறவினர்களையும், பிரான்சுக்குக் கீழ் வந்த நாடுகளின் பேரரசர்களாகவும், முக்கிய அலுவலர்களாகவும் நியமித்தார்.
1812 இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இத்தோல்வியிலிருந்து நெப்போலியன் அவர்களால் மீளமுடியவில்லை. அக்டோபர் 1813 இல், ஆறாவது கூட்டணிப் படைகள், லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன. 1814 ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினார். எனினும் 1815 ஜூன் 18 இல் வாட்டர்லூ என்னுமிடத்தில் அவர் இறுதித் தோல்வியைச் சந்தித்தார். இதன் பின்னர் அவரது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சென் ஹெலெனாத் தீவில் கழிந்தது.