நேபாள பிரதம அமைச்சர்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
நேபாள பிரதம அமைச்சர்கள் (Prime Minister of Nepal] (நேபாளி: नेपालको प्रधानमन्त्री, Nēpālkō Pradhānmantrī), வரலாற்றில் ஷா வம்ச காலத்தில், நேபாள இராச்சிய மன்னர் கீர்வான் யுத்த விக்ரம் ஷா ஆட்சிக் காலத்தில் மன்னருக்கு ஆலோசனை வழங்க மூல்-கஜி எனும் பதவிப் பெயரில் பிரதம அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது.
நேபாள இராச்சியம் நேபாளம் நேபாள பிரதம அமைச்சர் | |
---|---|
நேபாள அரசின் சின்னம் | |
வாழுமிடம் | சிங்க அரண்மனை, காட்மாண்டு |
நியமிப்பவர் | வித்யா தேவி பண்டாரி நேபாள குடியரசுத் தலைவர் |
உருவாக்கம் | 25 திசம்பர் 1843; 180 ஆண்டுகள் முன்னர் (1843-12-25) |
நேபாள மன்னர் ராணா பகதூர் ஷா 1806ல் முக்தியார் எனும் பிரதம அமைச்சர் பதவியை உருவாக்கினார். நாட்டின் அன்றாட நிர்வாகத்தின் தலைமை அலுவலராக முக்தியார் செயல்பட்டார்.[2][3][4]
15 செப்டம்பர் 1846 முதல் ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா, நேபாள மன்னர்களை கைப்பாவை பொம்மை அரசர்களாகக் கொண்டு, அவரது வழித்தோன்றல்கள், நேபாள பிரதம அமைச்சர்களாக 1951 முடிய பதவி வகித்தனர்.
ஐக்கிய இராச்சியத்தின் ஆவணக் குறிப்புகளில் முதல் நபராக பீம்சென் தபாவை, நேபாளத்தின் முக்தியார் (பிரதம அமைச்சர்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் பிரித்தானிய இந்திய அரசின் குறிப்புகளின் படி, மாதவர் சிங் தபா நேபாள இராச்சியத்தின் முதல் முக்தியார் என உள்ளது.[5]
நேபாள இராச்சியத்தை 1930ல் நேபாளம் என பெயர் மாற்றிய பிறகு, 1960 முதல் 1990 முடிய நேபாள தேசியப் பஞ்சாயத்து ஆட்சி முறை நடைமுறைபடுத்தப்பட்டது. அரசியல் கட்சிகள் & மக்கள் போராட்டங்களின் விளைவாக 1990ல் அரசியலமைப்புக்குட்பட்ட மன்னராட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் இரண்டாம் ஜனநாயகப் போராட்டத்தின் விளைவாக இயற்றப்பட்ட நேபாள அரசியலமைப்புச் சட்டத்தின் படி, 28 மே 2008ல் நேபாளத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
புதிய நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015, 20 செப்டம்பர் 2015 அன்று நடைமுறைக்கு வருவதை குறிக்கும் வகையில், நாட்டின் அதிபர் ராம் பரன் யாதவ் புதிய அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டார். நேபாளம் சமயசார்பற்ற, ஜனநாயக கூட்டாச்சி குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
புதிய அரசியலமைப்புச் சட்டப்படி, ஈரவை முறைமையுடன், 334 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றம் நிறுவ வழிகோலியது. 2017 நேபாள நாடாளுமன்றத் தேர்தல்கள் நவம்பர் மற்றும் டிசம்பர், 2017ல் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற நேபாள பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், நேபாளத்தின் புதிய பிரதம அமைச்சரை தேர்ந்தெடுப்பர்.
தற்போது புஷ்ப கமல் தகால் 26 டிசம்பர் 2022 முதல் பிரதம அமைச்சராக உள்ளார்.