தனிமம்
From Wikipedia, the free encyclopedia
வேதித் தனிமம் (Chemical element: இலங்கை வழக்கு: மூலகம்) என்பது அணுக்கருவில் ஒரே எண்ணிக்கையில் புரோட்டான்களைப் பெற்றிருக்கும் ஒரே வகையான அணுக்களைக் குறிக்கும் [1]. 118 தனிமங்கள் இதுவரை அடையாளம் கானப்பட்டுள்ளன. இவற்றில் 94 தனிமங்கள் இயற்கையில் தோன்றுவனவாகும் எஞ்சியிருக்கும் 24 தனிமங்களும் செயற்கை முறையில் தயாரிக்கப்படுவனவாகவும் இருக்கின்றன. 80 தனிமங்கள் குறைந்த பட்சமாக ஒரு ஐசோடோப்பையாவது பெற்றுள்ளன. 38 தனிமங்களின் உட்கருக்கள் கதிரியக்க உட்கருக்களாக உள்ளன. ஐதரசன், ஆக்சிசன், நைட்ரசன், இரும்பு, கந்தகம், பாசுபரசு, தங்கம், பாதரசம், யுரேனியம் போன்றவை தனிமங்களுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும். புவியில் ஆக்சிசன் என்ற தனிமம் எங்கும் நிறைந்திருக்கும் தனிமமாகவும், இரும்பு என்ற தனிமம் நிறை அடிப்படையில் அதிகமாகக் காணப்படும் தனிமமாகவும் கருதப்படுகிறது.
அண்டமும் அதில் அடங்கியுள்ள அனைத்தும் பருப்பொருட்களால் ஆனவையாகும். இப்பருப்பொருட்கள் யாவும் வேதிதனிமங்களால் உருவாக்கப்பட்டவையாகும். நாம் கண்களால் காணக்கூடிய சாதாரணமான பருப்பொருட்கள் பிரபஞ்சத்தில் உள்ள பருப்பொருட்களில் வெறும் 15% மட்டுமே உருவாக்குகின்றன என்று வானியல் ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. எஞ்சியுள்ளவை கரும்பொருள் எனப்படுகிறது. இதன் பகுதிக்கூறுகள் இதுவரை அறியப்படவில்லை. ஆனால்; நிச்சயமாக அது வேதித்தனிமங்களால் ஆக்கப்படவில்லை என்று உறுதியாகக் கூறப்படுகிறது.
ஐதரசன், ஈலியம் என்ற இரண்டு இலேசானத் தனிமங்களும் பெருவெடிப்பில் பிரபஞ்சம் உருவானபோது தோன்றியவைகளாகும். இவை பிரபஞ்சத்தில் காணப்படும் மிகப்பொதுவான தனிமங்களாகும். அடுத்த தனிமங்களான இலித்தியம், பெரிலியம், போரான் மூன்றும் பெரும்பாலும் அண்டக்கதிர்வீச்சின் அணுக்கருத் தொகுப்பு வினையால் உருவானவையாகும். எனவே இவை கன உலோகங்களைக் காட்டிலும் அரிதாகக் கிடைக்கின்றன. விண்மீன்களுக்குள் நிகழும் அணுக்கரு இணைவு மூலம் 6 முதல் 26 வரை புரோட்டான்களைக் கொண்ட தனிமங்கள் உருவாகின்றன. ஆக்சிசன், சிலிக்கன், இரும்பு போன்ற தனிமங்கள் அதிக அளவில் காணப்படுவது இதன் பிரதிபலிப்பாகும். 26 புரோட்டான்களைவிட அதிகமாகக் கொண்ட தனிமங்கள் மீயொளிர் விண்மீன் வெடிப்பு மூலம் மீயொளிர் விண்மீன்களில் தோன்றியவை ஆகும். இவ்விண்மீன்கள் வெடித்துச் சிதறும் போது இத்தனிமங்கள் விண்ணில் சிதறி கோள்கள் உருவாகும்பொது அவற்றுக்குள் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது [2].
தனிமம் என்ற சொல்லின் பொருள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புரோட்டான்களைக் கொண்டவை எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அது அயனியா வேதியியல் முறையில் பிணைக்கப்பட்டுள்ளதா என்பதைப்பற்றி கவலை கொள்வதில்லை. மேலும் ஒரு தூய்மையான வேதிப்பொருள் ஒரே தனிமத்தால் ஆனதையும் தனிமம் என்ற சொல் குறிக்கிறது. உதாரணம் ஐதரசன் [1].தனிமம் என்பது ஒரு தொடக்கநிலை பொருள் என்ற புரிதலும் கூறப்படுகிறது. இப்பொருளை ஆங்கில வேதியியல் நூல்கள் அங்கீகரிக்கவில்லை. ஆனால் சில மொழிகள் அங்கீகரிக்கின்றன. ஓர் எளிய தனிமத்திற்கு பல புறவேற்றுமை வடிவங்கள் இருக்கலாம்.
வெவ்வேறு தனிமங்கள் வேதியியல் முறையில் இணைந்து வேதிச் சேர்மங்களாக உருவாகின்றன. இவ்வாறு இணையும் தனிமங்களின் அணுக்கள் வேதிப் பிணைப்புகளால் ஒன்றாகப் பிணைக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் மிகக் குறைவான எண்ணிக்கை தனிமங்களே தூய கனிமங்களாக தனித்துக் கிடைக்கின்றன. செப்பு, வெள்ளி கார்பன் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். மந்த வாயுக்களும் அரியவகை தனிமங்களும் பிற வேதிப்பொருட்களுடன் இனைந்த நிலையிலேயே கிடைக்கின்றன. இயற்கையில் தனித்துக் கிடைப்பதாகக் கூறப்படும் 32 தனிமங்களும் கூட கலவைகளாகவே கிடைக்கின்றன. ஆக்சிசன், இரும்பு, நிக்கல் போன்ற தனிமங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
கார்பன், கந்தகம், செப்பு மற்றும் தங்கம் போன்ற இயல்பான தனிமங்களை கண்டுபிடித்த பழங்கால மனித சமூகங்கள் இத்தனிமங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. பின்னர் தோன்றிய புதிய நாகரீக மக்கள் கரியைப் பயன்படுத்தி தனிமங்களை தூய்மைப்படுத்தவும் பிரித்தெடுக்கவும் கற்றனர். இரசவாதிகளும் வேதியியலாளர்களும் பின்னர் பல தனிமங்களை அடையாளம் கண்டார்கள்; கிட்டத்தட்ட இயற்கையில் தோன்றும் அனைத்து தனிமங்களும் 1900 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்டது. .
தனிமங்களின் அணு எண் அதிகரிப்பின் படி அவை தனிம வரிசை அட்டவணையில் அடுக்கப்பட்டன. அவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் தொகுக்கப்பட்டன. மாசுக்கள், அரை வாழ்வுக் காலம், தொழிற்சாலை செயல்பாடுகள் முதலியன அடையாளம் காணப்பட்டன.