ஈமியூ
From Wikipedia, the free encyclopedia
ஈமியூ அல்லது ஈம்யூ (Emu) (தமிழக வழக்கு: ஈமு) ஆத்திரேலியாவின் மிகப் பெரிய பறவையாகும். உயிர்வாழும் பறவையினங்களில் தீக்கோழிக்கு அடுத்ததாகப் பெரிய பறக்காத பறவை இதுவாகும். இது ஏறத்தாழ இரண்டு மீட்டர் உயரமும், சுமார் 45 கிலோகிராம் எடையும் கொண்ட பறவையாக வளரக் கூடியது. உடல் சாம்பல் நிறமானது. ஆத்திரேலியாவில் பரவலாகக் காணப்படுகிறது. வேகமாக செல்லக் கூடியது. மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் இதனால் ஓட முடியும். பல்வகையான தாவரங்களையும் பூச்சிகளையும் உண்ணும் ஈமியூ, உணவுக்காக நீண்ட தொலைவு செல்லக் கூடியது. இது டிரமையசு இனத்தில் இன்றும் நிலைத்திருக்கும் ஒரேயொரு உறுப்பினராகும். இது, உயரத்தில் பார்க்கும்போது உலகில் இரண்டாவது பெரிய இன்றளவும் நிலைத்திருக்கும் பறவையும் ஆகும். முதலாவது இடத்தில் பறக்க முடியாத தீக்கோழி உள்ளது. ஈமுவின் இன்றளவும் நிலைத்திருக்கும் மூன்று உப இனங்கள் ஆத்திரேலியாவில் உள்ளன. ஈமு பறவைகள் ஆத்திரேலியாவின் பெரு நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளில் சாதாரணமாக உள்ளன, எனினும் அதிகளவில் மக்கள்தொகை நிறைந்த இடங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் வறண்ட பகுதிகளைத் தவிர்க்கின்றன.[4]
இந்த கட்டுரைக்கு நிபுணரின் கவனம் தேவைப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு உரையாடல் பக்கத்தினை பார்க்க. விக்கித்திட்டம் உயிரியல் அல்லது உயிரியல் வலைவாசல் வழியாக ஒரு நிபுணரைத் தேட உதவலாம். |
ஈம புதைப்படிவ காலம்:Paleocene–present Paleocene – present | |
---|---|
Captive Emu in Germany | |
Wild in Australia | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பறக்காத பறவை |
குடும்பம்: | Casuariidae |
பேரினம்: | Dromaius |
இனம்: | D. novaehollandiae |
இருசொற் பெயரீடு | |
Dromaius novaehollandiae (லேத்தம், 1790)[2] | |
சிற்றினம் | |
D. novaehollandiae novaehollandiae (லேத்தம், 1790)[3] | |
இளஞ்சிவப்பில் காட்டப்பட்டிருக்கும் பகுதியில் ஈமியூக்கள் உள்ளன. | |
வேறு பெயர்கள் | |
Dromiceius novaehollandiae |
மென்மையான-இறகுகளுள்ள, மண்ணிற, பறக்கமுடியாத பறவைகள் 2 மீட்டர்கள் (6.6 அடி) வரையான உயரத்தை அடைகின்றன. இவை நீளமான மெல்லிய கழுத்துகளையும், கால்களையும் உடையவை. ஈமு பறவைகள் வேகமான, மிதமான வேகத்தில் மிகநீண்ட தூரங்களுக்குப் பயணிக்கக்கூடியவை. தேவை ஏற்படின், ஒரே நேரத்தில் 50 கி.மீ/ம (31 மை/ம) வேகத்தில் சில தொலைவுகளைக் கடக்கக்கூடியவை. ஈமு பறவைகள் நீண்ட கால்களைக் கொண்டிருப்பதால் 275 சென்டிமீட்டர்கள் (9.02 அடி)[4] வரையான நீண்ட அடிகளை வைத்து நடக்கின்றன அல்லது ஓடுகின்றன. இவை சந்தர்ப்பத்துக்கு ஏற்ற விதமாக நாடோடியாகத் திரிபவை. இவை உணவைக் கண்டுபிடிப்பதற்கு நீண்ட தூரங்களுக்குப் பயணிக்கலாம். பல வகையான தாவரங்களையும் பூச்சிகளையும் உண்ணுபவை. ஆனால் உணவின்றி பல வாரங்களுக்கு உயிர்வாழக்கூடியவை என்றும் அறியப்பட்டுள்ளது. அவை செரிமான மண்டலத்திலுள்ள உணவை நசுக்க உதவுகின்ற கற்கள், உடைந்த கண்ணாடித் துண்டுகள் மற்றும் உலோகத் துண்டுகளையும் கூட உட்கொள்கின்றன. அவை அடிக்கடி நீர் அருந்துவதில்லை, பெரும்பாலும் ஒரு நாளுக்கு அல்லது இரண்டு நாளுக்கு ஒருமுறையே நீரருந்துகின்றன. மேலும், வாய்ப்பு கிடைக்கும் போது அதிக அளவு திரவத்தை அருந்துகின்றன. ஈமுக்கள் தண்ணீரில் அமர்ந்திருக்கக்கூடிய திறன் உள்ளவை, அவை நீந்தவும் தெரிந்தவை. இவை புதுமையான மற்றும் பிற செய்திகளை அறியவேண்டும் என்ற ஆவலுள்ள பிராணிகளாகும். இவை பிற விலங்குகள் மற்றும் மனிதர்களைப் பின்தொடர்ந்து, கண்காணிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஈமுக்கள் இரவில் தொடர்ந்து தூங்கமாட்டா. ஆனால் உட்கார்ந்தபடியே பல குட்டித் தூக்கங்கள் போடும்.
ஈமுக்களின் கால்விரல்களில் ஒரு நகம் உள்ளது. கத்தியை ஒத்ததாக இருக்கும் இந்நகம் இதை வேட்டையாட வரும் மிருகங்களையும் எதிரி ஈமுக்களையும் துரத்தியடிப்பதற்குப் பயன்படும். எந்தவொரு விலங்குகளையும்விட இவற்றின் கால்கள் மிகவும் வலிமையானவை. எனவே அவை உலோகக் கம்பி வேலிகளைக் கிழித்தெறிய முடிகின்றது. அவற்றுக்கு அண்மையிலுள்ள வேட்டையாடும் மிருகங்களைக் கண்டறிய உதவும் வகையில் சிறந்த கண்பார்வையும், கேட்டல் உணர்வும் உள்ளன. ஒரு கண்ணின் மீதுள்ள இறகு, சுற்றியுள்ள சூழலுக்குப் பொருந்துகின்ற மற்றும் இதன் உருமறைப்பை மேம்படுத்துகின்ற விதமாக பிரதேசரீதியாக வேறுபடும் தன்மை கொண்டது. ஈமுவின் இறகுகள் உடலினுள் வெப்பம் பாய்வதைத் தடுக்க உதவுவதால், நண்பகல் வெப்பத்தின்போது இவை சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. இவை பெரிய வரம்பிலான வேறுபடுகின்ற வெப்பநிலைகளைத் தாங்கக்கூடியவை மற்றும் திறம்பட வெப்பநிலையைச் சீராக்கக் கூடியவை. ஆண் மற்றும் பெண் பறவைகளைக் கண்ணால் கண்டு வேறுபடுத்தியறிவது கடினமாகும். ஆனால் பெருத்த கழுத்துப் பையைப் பயன்படுத்தி அவை வெளிவிடும் உரத்த சத்தங்களின் வகைகளைக் கொண்டு வேறுபடுத்தலாம். ஈமுக்கள் மே, சூன் மாதங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன, அத்துடன் அவை ஒரு புணர்ச்சியுடையவை அல்ல. ஒரு துணையை அடைவதற்காக பெண் பறவைகளுக்கிடையே சண்டை ஏற்படுவது சாதாரணமாகும். பெண் பறவைகள் பல தடவைகள் புணர்ச்சியில் ஈடுபட்டு ஒரு பருவத்தில் பல முறை பல முட்டைகளை இடலாம். இனப்பெருக்கப் பருவத்துக்கு முன்னதாக இவை எடை கூடுகின்றன. ஆண் பறவையே பெரும்பாலான நேரம் அடைகாக்கிறது. இந்தக் காலத்தில் ஆண் பறவை சாப்பிடுவதில்லை என்பதால் குறிப்பிடத்தக்க அளவு உடல் எடையை இழக்கிறது. சுமார் எட்டு வாரங்களுக்குப் பின்னர் முட்டைகள் குஞ்சு பொரிக்கின்றன. புதிய குஞ்சுகளை அவற்றின் தகப்பன் பறவைகளே பேணி வளர்க்கின்றன. சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர் அவை முழு அளவுக்கு வளர்கின்றன. ஆனால் அரையாண்டுக்குப் பின்னர் வரும் அடுத்த இனப்பெருக்கப் பருவம் வரையிலும் அவை தமது குடும்பத்துடன் தொடர்ந்து இருக்கின்றன. ஈமுக்கள் காடுகளில் 10 க்கும் 20 க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. இவற்றை காட்டு நாய்கள் (டிங்கோ), கழுகுகள் மற்றும் பருந்துகள் வேட்டையாடுகின்றன. காட்டு நாய்களிடமிருந்து தப்பிக்க அவை குதிக்கின்றன மற்றும் உதைக்கின்றன. ஆனால் கழுகுகளுக்கும் பருந்துகளுக்கும் எதிராக, அவற்றால் ஓடித் தப்ப மட்டுமே முடியும்.
முன்னர் தசுமேனியாவில் வாழ்ந்துவந்த தசுமேனிய ஈமு உப இனங்கள், 1788 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் ஐரோப்பியக் குடியேற்றம் ஏற்பட்ட பின்னர் அழியத் தொடங்கின. பின்னர் மனித செயற்பாடுகளின் மூலமே பெருநிலப்பரப்பில் உப இனங்கள் பரவின. ஒரு காலத்தில் கிழக்குக் கடற்கரையில் சாதாரணமாக இருந்த ஈமுக்கள் இப்போது அரிதாகிவிட்டன. இதற்கு மாறாக, கண்டத்தின் உள்நாட்டுப்பகுதியில் விவசாயத்தின் வளர்ச்சியும், இருப்புக்காக அதிக அளவில் நீர் வழங்கலும் நிகழ்ந்ததால் வறண்ட பிரதேசங்களில் ஈமுவின் பரவல் அதிகமானது. இதனால் இது அருகிவரும் இனமாகவோ அதற்கான வாய்ப்பிலுள்ள இனமாகவோ இப்போது இல்லை. பூர்வீக ஆத்திரேலியர்கள் மற்றும் முற்கால ஐரோப்பியக் குடியேற்றவாசிகளுக்கான உணவு மற்றும் எரிபொருள் மூலமாக ஈமுக்கள் இருந்தன. ஈமுக்கள் இறைச்சி, எண்ணெய் மற்றும் தோல் ஆகியவற்றுக்காக வளர்க்கப்படுகின்றன. ஈமு கொழுப்பு குறைவான இறைச்சியாகும். ஈமு எண்ணெயானது அழற்சிக்கு எதிரான மற்றும் ஒட்சியேற்றத்துக்கு எதிரான விளைவுகளைக் கொண்டுள்ளது என விற்பனையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மனிதர்களில் இது இன்னமும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஈமு ஆத்திரேலியாவின் ஒரு முக்கியமான பண்பாட்டுச் சின்னமாக விளங்குகிறது. இது மரபுச் சின்னங்களிலும் பல்வேறு நாணயங்களிலும் இடம்பெறுகின்றன, மேலும் பூர்வீக ஆத்திரேலிய புராணக்கதைகளில் பிரபலமான அம்சங்களான தோன்றுகின்றன. அதுமட்டுமின்றி நூற்றுக்கணக்கான இடங்களுக்கு இந்தப் பறவையின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.