கிறித்தவத் தேவாலயம்
From Wikipedia, the free encyclopedia
கிறித்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்துவதற்காகக் கூடும் இடம் தேவாலயம் அல்லது கோவில் (சர்ச்) என்று அழைக்கப்படுகிறது. கத்தோலிக்க கிறித்தவர்களின் கோவில் "மாதா கோவில்" என்றும் மக்கள் வழக்கில் கூறப்படுவதுண்டு. பெரும் எண்ணிக்கையிலான கத்தோலிக்க கோவில்கள் இயேசுவின் அன்னையாகிய மரியாவின் பெயரால் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதும் இதற்கு ஒரு காரணம் ஆகும். இத்தேவாலயத்தில் தனித்தனி கிறித்தவ சபைக்குத் தலைமைதாங்கும் குரு அல்லது சபைத் தலைவர் திருப்பலி, நற்கருணைக் கொண்டாட்டம், விவிலியக் கொண்டாட்டம் போன்ற சமயச் சடங்குகளை முன்னின்று நடத்துவார். அவரைத் தொடர்ந்து அவரின் ஆலோசனைப்படி, கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் வழிபாடுகளைச் செய்கின்றனர். பல தேவாலயங்கள் சிலுவை உருவில் வடிவமைக்கப்படுகின்றன. கோபுரம் அல்லது கும்மட்டம் உடையதாக இருக்கின்றன. கிறித்தவ சமயத்தின் முன்னோடி போல் அமைந்த யூத மதத்தில் "தொழுகைக் கூடம்" (synagogue) உண்டு. யூத வழக்கத்தைப் பின்பற்றி கிறித்தவர்களும் வழிபாட்டுக்கென தனியே தேவாலயங்கள் கட்டத் தொடங்கினர். ஐரோப்பாவில் கிறித்தவம் முதன்மையான மதமான பின்னர் பெரும் எண்ணிக்கையிலும் அளவிலும் தேவாலயங்களை அமைப்பது வழக்கமானது.