வடிநிலம்
From Wikipedia, the free encyclopedia
வடிநிலம் (Drainage basin) என்பது, மழை அல்லது உருகும் பனி போன்றவற்றை ஏந்தி, ஆறு, ஏரி, கடல், ஈரநிலங்கள் போன்ற நீர்த்தேக்கங்களுள் வடிந்தோடச் செய்வதற்கான நிலப்பகுதி ஆகும். வடிநிலம் என்பது, நீரைக் காவிச்சென்று மேற்படி நீர்த்தேக்கங்களுக்குள் செலுத்தும் சிற்றாறுகள், ஆறுகள் போன்றவற்றையும், இத்தகைய நீர் வழிகளுக்குள் நீரை வடியவிடும் நிலப் பகுதிகளையும் ஒருங்கே குறிக்கிறது. நீரேந்து பகுதி என்பதுவும் இதே கருத்துருவை விளக்கும் சொல்லே.
நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழைவீழ்ச்சி மற்றும் பனிப்பொழிவைப் பெறும் பிரதேசம் அதன் நீரேந்து பிரதேசம் எனப்படும். வழமையாக நீரேந்து பிரதேசத்தின் வெளிச்செல்லும் பாதை ஆறு, ஏரி, ஓடை, கடல், பெருங்கடல் மற்றும் ஈர நிலம் போன்றவையாகக் காணப்படும். மூடப்பட்ட நீரேந்து பிரதேசங்களில், ஒன்றுசேரும் நீர் நீரேந்து பிரதேசத்தினுள்ளேயே ஒரு தனிவடிச்சலாக காணப்படும். இது நிலையான ஏரியாக அல்லது உலர் ஏரியாகவோ அல்லது தேங்கி நிலங்கீழ் நீராக வடியும்.[1]