![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4a/AMI_scheme.png/640px-AMI_scheme.png&w=640&q=50)
மாரடைப்பு
From Wikipedia, the free encyclopedia
இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது இதயத்திசு இறப்பு அல்லது இதயத்தசை இறப்பு (myocardial infarction) ஏற்படுகிறது. இது பெரும்பாலும் முடியுருத் தமனியில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் கொலஸ்டிரால் போன்ற கொழுப்புப் பொருட்களும் வெள்ளைக் குருதி அணுக்களும் சேர்ந்து உட்புறத்தில் வீக்கத்தழும்பு உருவாகுவதால் தமனி குறுகிவிடுகின்றது. தமனியில் உள்ள இத்தகைய நிலை தமனிக்கூழ்மைத் தடிப்பு என அழைக்கப்படுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு குருதியே செல்வதால் உயிர்வளிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும். ஓய்வு எடுக்கும் போதும் நைட்ரேட்டு மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதய குருதியோட்டம் சீரடைந்து இந்த வலி குறையும். இதை மார்பு நெரிப்பு என்கிறோம். இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் குருதி உறைந்து குழலியக்குருதியுறைமை ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும். இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசைப் பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத் தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இத்தகைய சூழலே இதயத்தசை இறப்பு ஆகும்.
இதயத்தசை இறப்பு | |
---|---|
![]() | |
இதயத்தசை இறப்பின் விளக்கப்படம் (LCA) இடது முடியுருத் தமனியில் (1) அடைப்பு ஏற்படும்போது அதன் கீழ் உள்ள தசைப்பகுதிகள் (2) இறந்துவிடுகின்றன. | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | இதயவியல் |
ஐ.சி.டி.-10 | I21.-I22. |
ஐ.சி.டி.-9 | 410 |
நோய்களின் தரவுத்தளம் | 8664 |
மெரிசின்பிளசு | 000195 |
ஈமெடிசின் | med/1567 emerg/327 ped/2520 |
பேசியண்ட் ஐ.இ | மாரடைப்பு |
ம.பா.த | D009203 |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/80/AMI_bloodtests_engl.png/640px-AMI_bloodtests_engl.png)
இதயத்தசை இறப்பை இதயக் கோளாறு, மாரடைப்பு போன்ற பொதுவான பெயர்களால் குறிப்பிட்டாலும் மாரடைப்பு எனப்படுவது மார்பு நெரிப்பு, இதயத்தசை இறப்பு ஆகிய இரு சூழல்களையும் பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கில் இருந்து வருகின்றது. இதயத்தசை ஒருவகை இழையம் (திசு) என்பதால் இதயத்திசு இறப்பு என்றும் அழைக்கிறோம். திடீர் இதய இறப்பு மற்றும் இதய நிறுத்தம் என்பன இதயத்தசை இறப்புக் காரணமாகவும் வரலாம்; இதயத்தடுப்பு, குறுநடுக்கம் போன்ற வேறு காரணங்களாலும் வரலாம்.
கடுமையான மாரடைப்பிற்கான மரபார்ந்த அறிகுறிகள்: திடீர் நெஞ்சு வலி (வழக்கமாக நெஞ்சிலிருந்து இடது கை அல்லது கழுத்தின் இடப்பாகத்திற்கும் பரவும்), மூச்சு திணறுதல், குமட்டுதல், வாந்தி, வியர்த்தல், மனக்கலக்கம் ஆகியவையாகும்[1]. பெண்கள் ஆண்களைக் காட்டிலும் குறைவான குறிப்பிடத்தக்க அறிகுறிகளை (பொதுவாக மூச்சு திணறுதல், தளர்ச்சி, செரிமானமற்ற (அஜீரண) உணர்வு, உடல் சோர்வு) ஆகியவற்றை அனுபவிக்கிறார்கள்[2]. ஏறக்குறைய கால் பங்கு மாரடைப்பு நிகழ்வுகள் நெஞ்சு வலி அல்லது மற்ற அறிகுறிகளில்லாமல் அமைதியாவே நடக்கின்றன[3].
இதயதசை பாதிப்பை கண்டறியும் சோதனைத் தேர்வுகள்: மின் இதயத்துடிப்பு வரைவு (ECG), மின் ஒலி இதய வரைவு, இதய காந்த ஒத்ததிர்வு வரைவு (MRI) மற்றும் பல்வேறு இரத்த சோதனைகள். பெரும்பாலும் உபயோகப்படுத்தும் இரத்த குறியீடுகள்: கிரியாட்டின் கைனேசு நொதியின் செயல்திறன், டுரோபோனின் அளவுகள். சந்தேகத்திற்குறிய மாரடைப்புகளில் உடனடி சிகிச்சையாக உயிர்வளி (ஆக்சிசன்) கொடுத்தல், அடிநாக்கின் கீழே நைட்ரோகிளிசரின் மாத்திரைகள் வைத்தல், ஆஸ்பிரின் ஆகியவை உபயோகப்படுத்தப்படுகின்றன[4].
உலகளாவியரீதியில் மாந்தர்களில் அதிக இறப்பை ஏற்படுத்தும் நோய்களுள் இதயத்தசை இறப்பும் முதன்மை வரிசையில் உள்ளது[5]. மாரடைப்பிற்கு முக்கியமான இடர் காரணிகளாகக் கருதப்படுபவை: ஏற்கனவே ஏற்பட்ட இதயகுழலிய நோய், முதுமை, புகைப்பிடித்தல், இரத்தத்தில் சில கொழுமியங்கள் (டிரைகிளிசரைடுகள், குறையடர்த்தி கொழுமியப் புரதங்கள்) அதிகரித்தல் மற்றும் குறைந்த அளவு உயரடர்த்தி கொழுமியப் புரதங்கள் இருப்பது, நீரிழிவு, உயர் இரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நாள்பட்ட சிறுநீரக நோய், இதயச்செயலிழப்பு, அதிக அளவு மது அருந்துதல், போதைப் பொருள்களை (கொகைன், மெதாம்பிடமின்) பயன்படுத்துதல், நாள்பட்ட உயர் மன இறுக்கங்கள் (உளைச்சல்கள்) [6][7].
இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு, இடது இதயக்கீழறை செயல்பாட்டைத் தடுப்பதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, இடது இதயக்கீழறை செயலிழக்கிறது. இதன் விளைவாக நுரையீரலில் நீர் கோர்த்தல் ஏற்படுகின்றது. அதிக அளவு வியர்த்தல்[1], தளர்ச்சி, தலை சுற்றல், மூச்சு திணறுதல், குமட்டுதல், வாந்தி, படபடப்பு போன்றவை ஏனைய அறிகுறிகளாகும். இத்தகு அறிகுறிகள் இதய செயல் பிறழ்ச்சியின் விளைவாக நிகழும் இரத்த ஒட்ட பிறழ்வுகள் மற்றும் வலியின் விளைவாக ஏற்படும் பரிவு நரம்பு மண்டலத்திலிருந்து வரும் கேட்டக்கோல்அமைன்கள் பெருமளவு அதிகரிப்பதால் தூண்டப்படுபவையாகும்[8]. மாரடைப்பின் போது நினைவிழப்பு, திடீர் மரணம் போன்றவை நிகழும்.