பாறை
From Wikipedia, the free encyclopedia
பாறை (rock or stone) என்பது கனிமங்கள் அல்லது கனிமப்போலிகளின் சேர்க்கையினால் இயற்கையாக உருவாவது ஆகும்[1].
பாறைகள் மனித வரலாற்றுடன் தொடர்ந்து இணைந்திருக்கும் ஒன்றாகும். மனிதர்கள் ஆரம்பத்தில் வேட்டைக்கும், பாதுகாப்பிற்கும் தேவையான கருவிகளை பாறைகளிலிருந்து பெற்றுக் கொண்டனர். பின்னர் வாழ்விடங்களை அமைத்துக்கொள்ள கட்டடத்திற்குத் தேவையான பொருளாகவும், நினைவுச் சின்னங்களை அமைப்பதற்குத் தேவையான பொருளாகவும் பயன்படுத்தினர். புவியோட்டின் அமைப்பு, இயல்பு மற்றும் கூர்ப்பு போன்றவற்றை காலவோட்டத்தினூடாகக் கட்டுப்படுத்தி வரும் செயல்முறை, வானிலையாலழிதல் செயல்முறை, தாவரத் தொகுதியின் உருவாக்கம் போன்றவற்றின் ஒன்றிணைந்த விளைவுகளால், தற்போது நாம் காணும் நிலத்தோற்றத்தைப் பாறைகள் உருவாக்கியுள்ளன. அத்துடன் பாறைகளில் காணப்படும் கனிமங்கள், உலோகங்கள் மனித நாகரீகத்தின் செழிப்பிற்கும், பண்பாட்டுச் சிறப்பிற்கும் மிக முக்கியமான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.[2]
பாறைகள், அவற்றில் அடங்கியுள்ள கனிமங்கள், வேதியியல் சேர்க்கை, பரப்புத் தோற்றம் (texture), அவை உருவாகும் முறை என்பவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.[3] பாறைகள் பொதுவாக மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை, தீப்பாறைகள், படிவுப் பாறைகள், மற்றும் உருமாறிய பாறைகள் என்பனவாகும்.[4]