பார்த்தினன்
From Wikipedia, the free encyclopedia
பார்த்தினன் (Parthenon) என்பது கிரீசு நாட்டின் ஏதென்சு நகரத்திற்கு அண்மையிலுள்ள கோட்டையில் காவல் தெய்வம் கன்னி ஆதெனாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழங்கால கிரேக்க கோயிலாகும்[3][4]. கிரீசு நாட்டில் எஞ்சியுள்ள கட்டிடங்களில் மிகவும் புகழ்பெற்றது இந்தப் பார்த்தினன் கோயில் ஆகும். உலகம் போற்றும் இப்பழைய கோயில் கட்டிடம் 2500 ஆண்டுகளாக அங்கு நின்று கொண்டிருக்கிறது. ஏதெனியப் பேரரசின் ஆட்சி உச்சகட்டத்தில் இருந்த கி.மு 447 ஆம் ஆண்டு இக்கட்டிடத்தின் கட்டுமாணமப் பணி தொடங்கியது. கி.மு. 438 இல் கோயில் கட்டி முடிக்கப்பட்டாலும் கி.மு.432 வரை கோயிலை அலங்கரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. பொதுவாக இக்கோயில் கிரேக்கக் கட்டிடக்கலையின் மூன்று ஒழுங்குகளுள் ஒன்றான டோரிக் ஒழுங்கின் உச்சநிலையாக கருதப்படுகிறது. கோயிலுள்ள அலங்கார சிற்பங்கள் கிரேக்க கலையின் உச்சப்புள்ளிகளாகக் கருதப்படுகின்றன. பண்டைய கிரேக்கம், ஏதெனியக் குடியரசு மற்றும் மேற்கத்திய நாகரிகம் ஆகியனவற்றுக்கான ஒரு நிலையான அடையாளச் சின்னமாகவும் [5], உலகின் மிகச்சிறந்த கலாச்சார நினைவுச்சின்னங்களில் ஒன்றாகவும் பார்த்தினன் கோயில் கருதப்படுகிறது. பார்த்தினன் மற்றும் அக்ரோபோலிசில் கட்டப்பட்ட நினைவுச்சின்னங்களை கட்டிய ஏதென்சியர்கள் இவற்றை பாரசீக படையெடுப்பாளர்கள் மீது போரிட்டு வெற்றி பெற்ற எலனிக்கியர்களை கொண்டாடுவதற்காகவும், அவ்வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி சொல்வதற்காகவும் கட்டியதாகவே நினைத்தார்கள் [6].
பார்த்தினன் Parthenon | |
---|---|
Παρθενών (கிரேக்கம்) | |
பார்த்தினன் | |
பொதுவான தகவல்கள் | |
வகை | கிரேக்க கோயில் |
கட்டிடக்கலை பாணி | செந்நெறிக்காலம் |
இடம் | ஏதென்சு, கிரேக்கம் |
தற்போதைய குடியிருப்பாளர் | அருங்காட்சியகம் |
கட்டுமான ஆரம்பம் | கி.மு 447[1][2] |
நிறைவுற்றது | 438 BC[1][2] |
அழிக்கப்பட்டது | பகுதியாக 26 செப்டெம்பர் 1687 |
உரிமையாளர் | கிரேக்க அரசாங்கம் |
உயரம் | 13.72 m (45.0 அடி) |
பரிமாணங்கள் | |
பிற பரிமாணங்கள் | செல்லா: 29.8 கீழ் 19.2 m (98 கீழ் 63 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அளவு | 69.5 கீழ் 30.9 m (228 கீழ் 101 அடி) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | இக்டினாசு, கால்லிகிரேட்டசு |
பிற வடிவமைப்பாளர் | பிடியசு (சிற்பி) |
கோயிலின் சீரழிந்த பகுதிகளை சிரமைப்பதற்குத் தேவையான தேர்ந்தெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு திட்டங்களை கிரேக்க கலாச்சார அமைச்சகம் தற்போது நடத்தி வருகிறது [7]. பழைய ஆதெனா ஆலயம் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக புதிய பார்த்தினன ஆலயம் மட்டும் அங்கு நிறுவப்பட்டுள்ளது. வரலாற்று அறிஞர்கள் அதை முந்தைய பார்த்தினன் அல்லது பழைய பார்த்தினன் என்று அழைத்தார்கள் இது கி.மு. 480 இல் பாரசீக படையெடுப்பின் போது பழைய பார்த்தினன் ஆலயம் அழிக்கப்பட்டது. பார்த்தினன் ஆலயம் வாந்தொல்பொருளியல் அடிப்படையில் ஐயாடெசு விண்மீன்கொத்தை நேரமைத்து கட்டப்பட்டுள்ளது [8]. பெரும்பாலான கிரேக்க கோயில்களைப் போலவே, பார்த்தினன் கோயிலும் நடைமுறையில் ஒரு கருவூலமாகப் பணியாற்றியது [9][10].
ஒரு காலத்தில் இக்கோயில் டெலியன் கூட்டணியின் கருவூலமாக இருந்தது, பின்னர் அது ஏதேன் பேரரசு ஆனது. ஆறாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டில் பார்த்தினன் கன்னி மேரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கிறித்துவ தேவாலயமாக மாற்றப்பட்டது. 1460களின் தொடக்கத்தில் ஒட்டோமான் வெற்றிக்குப் பிறகு இது ஒரு பள்ளிவாசலாக மாறியது. நீண்ட வரலாறு [11] கொண்ட பார்த்தினான் 1687 ஆம் ஆண்டு. நடைபெற்ற துருக்கியப் போரின் (1683-1699) ஒரு பகுதியாக, வெனிசியர்கள் ஏதென்சைத் தாக்கவும் அக்ரோபோலிசைக் கைப்பற்றவும் மேற்கொண்ட போரில் மிகப்பெரிய பேரழிவினால் சேதப்படுத்தப்பட்டது. செப்டம்பர் மாதம் 26 அன்று கோயில் கட்டிடத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த தேவையற்ற படைதளவாடங்களை வெனீசியன் ஒருவன் பற்றவைத்த காரணத்தால் தீவிபத்து ஏற்பட்டு கோயில் வெடித்துச் சிதறியது. சிலைகள் சேதமடைந்தன.
எல்கின் பளிங்குகள் அல்லது பார்த்தினன் பளிங்குகள் என்று அழைக்கப்பட்ட அச்சிலைகள் 1816 ஆம் ஆண்டில் இலண்டனிலுள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்திற்கு விற்கப்பட்டன. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அச்சிலைகளைத் திரும்ப ஒப்படைக்கும்படி 1983 ஆம் ஆண்டு முதல் கிரீசு அரசாங்கம் பிரிட்ட்டன் அரசை கேட்டு வருகிறது[12].