பாக்கித்தான் முன்மொழிவு
From Wikipedia, the free encyclopedia
இலாகூர் முன்மொழிவு (Lahore Resolution, உருது: قرارداد لاہور, கறார்டாடு-இ-இலாகூர்; வங்காளம்: লাহোর প্রস্তাব, லாகோர் பிரஸ்தாபு), 1940ஆம் ஆண்டில் மார்ச் 22-24 நாட்களில் இலாகூரில் மூன்று நாட்கள் நடந்த அகில இந்திய முசுலிம் லீக்கின் மாநாட்டில் வங்காள மாகாணத்தின் பிரதமராக இருந்த வங்காளப் புலி ஏ.கே. ஃபசுலுல் ஹக் முன்மொழிந்த முறைசார் அரசியல் அறிக்கையாகும். இதன் முக்கியக் கூறு பிரித்தானிய இந்தியாவில் முசுலிம்கள் பெரும்பான்மையாக உள்ள வடமேற்கு, கிழக்குப் பகுதிகளில் "தனி மாநிலங்களை" உருவாக்க வேண்டும்; இந்த மாநிலக் குழுக்களுக்கு தன்னாட்சியும் இறைமையும் வழங்கப்பட வேண்டும்.[1][2] இந்த முன்மொழிவு பின்னர் தனியான, ஒரே நாடாக பாக்கித்தானைக் கோருவதற்கு காரணமாக அமைந்தது.[3]
"பாக்கித்தான்" என்ற பெயரை சவுத்திரி ரகமத் அலி 1933இல் பாக்கித்தான் சாற்றுரையில்[4] முன்மொழிந்திருந்தபோதும், ஏ.கே. ஃபசுலுல் ஹக்கும் முகமது ஜின்னாவும் மற்ற முசுலிம் தலைவர்களும் இந்து–முஸ்லிம் ஒற்றுமையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.[5] இருப்பினும், பிரித்தானியரின் தூண்டுதல்களாலும் இந்துக்களிடையே எழுந்த நம்பிக்கையின்மையாலும் அரசியல் நிலை கொந்தளித்து தனிநாடு கோரிக்கை வலுத்தது.[6]