துருவ ஒளி
From Wikipedia, the free encyclopedia
துருவ ஒளி (aurora) என்பது வட, தென் துருவங்களை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஓர் அபூர்வ ஒளித் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது. இந்த ஒளித் தோற்றப்பாடு உலகம் தோன்றிய காலம் தொட்டே காணப்படுவதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த ஒளித்தோற்றமானது பொதுவாக ஆர்க்டிக், அண்டார்க்டிக்கா பகுதிகளில் இலகுவில் காணக்கூடியதாக இருக்கின்றது. வட துருவத்தில் தோன்றும்போது இது வடதுருவ ஒளி எனவும், தென் துருவத்தில் தோன்றும்போது இது தென் துருவ ஒளி எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த ஒளித்தோற்றத்துக்குரிய அறிவியற் பெயர்கள் aurora borealis (வடதுருவ ஒளி), aurora australis (தென்துருவ ஒளி) என்பவையாகும். இது ஒரு வானுலகத் தோற்றப்பாடு (celestial phenomenon) எனப்படும். Aurora borealis எனும் பெயரை, 1621 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த தத்துவஞானியும், பாதிரியாரும், அறிவியலாளரும், வானியல் வல்லுநரும், கணிதவியலாளருமான பியர் கசண்டி (Pierre Gassendi) என்பவர் aurora என்ற ரோமானியப் பெண் தெய்வத்தின் பெயரைக் கொண்டும், வடபருவக்காற்றை கிரேக்க மொழியில் குறிக்கும் Boreas என்ற சொல்லைக்கொண்டும் வழங்கினார்[1].
இதை இயற்கையின் வாணவேடிக்கை அல்லது ஒளிக்கோலம் என்று சொல்லலாம். இருண்ட வானத்தின் குறுக்காக, நிலையற்று ஆடும் ஒளியாலான திரைச் சீலையின் நடனம் போன்று இது காணப்படுவதாகக் கற்பனையாக மெருகூட்டிச் சொல்லலாம். இந்த அழகை நேரில் பார்ப்பவர்கள், இந்த அழகை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் என்று சொல்கிறார்கள்.
நோர்வே நாட்டைச் சேர்ந்த கிரிஸ்டியான் பிர்க்கலாண்ட் (Kristian Birkeland) எனப்படும் ஒரு அறிவியலாளர் துருவ ஒளியின் இயல்பை, வளிமண்டலத்தின் மின்சாரம் தெளிவாக்குகிறது என்ற கொள்கையைக் கூறினார்.[2][3]. இவர் ஏழு தடவைகள் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்[4][5]. இவரைக் கௌரவிப்பதற்காக நோர்வேயின், 200 குரோணர் பணத்தாளில் இவரது தலையைப் பதிவு செய்யப்பட்டது[6].