தன்னுடல் தாக்குநோய்
From Wikipedia, the free encyclopedia
உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் மிகை இயக்கத்தால், உடலினுள்ளேயே இருக்கும் உயிரணுக்கள், இழையங்களுக்கு எதிராக பிறபொருளெதிரிகள் உருவாகி, அவற்றின் தொழிற்பாட்டால் ஏற்படும் நோய்களே, தன்னுடல் தாக்குநோய்கள் அல்லது தன்னெதிர்ப்பு நோய்கள் (Autoimmune diseases) எனப்படும்.[1][2] அதாவது உடலானது தன்னுடலில் உள்ள சில பகுதிகளை நோய்க்காரணியாக தவறாக அடையாளப்படுத்துவதால், தனக்கு எதிராக தானே தொழிற்படும் நிலையாகும். இது குறிப்பிட்ட உடலுறுப்பில் ஏற்படுவதாகவோ, அல்லது உடலின் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான இழையத்தில் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இவ்வகையான நோய்களுக்கான சிகிச்சையாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை குறைக்கவல்ல அல்லது தணிக்கவல்ல மருந்துகள் பயன்படுத்தப்படும்.
தன்னெதிர்ப்பு நோய்கள் | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | நோயெதிர்ப்பியல், வாதவியல் |
ஐ.சி.டி.-10 | D84.9, M35.9 |
ஐ.சி.டி.-9 | 279.4 |
ம.இ.மெ.ம | 109100 |
நோய்களின் தரவுத்தளம் | 28805 |
மெரிசின்பிளசு | 000816 |
ம.பா.த | D001327 |
தன்னுடல் தாக்குமை (Autoimmunity) என்பது ஒரு உயிரினத்தினால் தனது சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் 'தன்னுடையது' எனக் கண்டுகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, அவற்றை வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும். இப்படிப்பட்ட பிறழ்வுடைய நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் விளைவாக வரும் நோய்கள் தன்னுடல் தாக்குநோய்கள் என அழைக்கப்படும்.