சிதியர்கள்
From Wikipedia, the free encyclopedia
சிதியர்கள் அல்லது சகர்கள் (Scythians - Saka) (ஆட்சிக் காலம்:கிமு 7-ஆம் நூற்றாண்டு முதல் கிமு 3-ஆம் நூற்றாண்டு முடிய) என்பவர்கள் பண்டைய நடு ஆசியாவின் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி இனக் குழுக்கள் ஆவர்.[1][2][3][4] சிதியர்கள் மத்திய ஆசிய - ஐரோப்பாவின் யுரோசியாவின் ஸ்டெப்பிப் புல்வெளிகளில் ஆடு, மாடு, மற்றும் குதிரைகள் போன்ற கால்நடைகளை மேய்த்த நாடோடி இன மக்கள் ஆவர்.[5] சிதியர்களின் மொழிகள் அனைத்தும் கிழக்கு பாரசீக மொழியின் கிளை மொழிகள் ஆகும்.[6][7]சிதியர்கள் குதிரை வளர்ப்புக் கலையில் வல்லவர்கள். போர்களில் குதிரைகளை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள். கட்டுமஸ்தான உடல்வாகு, வலிமை, போர்க்குணம், வீரம் நிரம்பிய ஒரு நாடோடி குழுவாக வாழ்ந்து சென்ற இடங்களை எல்லாம் கைப்பற்றிய அசாத்திய ஆக்கிரமிப்பாளர்களாக இந்த பழங்குடியினரை வரலாற்றாய்வார்கள் அடையாளப்படுத்துகிறார்கள். மத்திய ஆசியாவில் பரவலாகவும் சீனா முதல் வடக்கு கருங்கடல் பகுதிவரை இவர்களின் ஆக்கிரமிப்புச் சுவடுகளை வரலாற்றாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கிரேக்க வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, பண்டைய சிதியர்கள் கருங்கடலுக்கும் - காஸ்பியன் கடலுக்கும் இடையே உள்ள காக்கேசியா பகுதிகளில் வாழ்ந்தவர்கள் என அறியப்படுகிறது. பிற சிதியர்களின் இனக்குழுவினரை மத்திய ஆசியாவைச் சேர்ந்த சகர்கள் என புது அசிரியப் பேரரசும் மற்றும் ஹான் சீனர்களும் குறித்துள்ளனர்.[8]