சிங்கப்பூர் மக்கள் தொகையியல்
From Wikipedia, the free encyclopedia
சிங்கப்பூர் மக்கள் தொகையியல் (Demographics of Singapore) என்பது சிங்கப்பூர் நாட்டின் மக்கள் தொகையையும், மக்கள் தொகை சார்ந்த அம்சங்களான மக்கள் தொகை அடர்த்தி, இனம், கல்வி நிலை, மக்களின் ஆரோக்கியம், பொருளாதார நிலை, மதச் சார்புகள் உள்ளிட்ட மக்கள் தொகையின் பிற அம்சங்கள் குறித்தான அலசலையும் குறிக்கின்றது.
2012 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் இத் தீவின் மக்கள் தொகை 5.31 மில்லியன்களாக காணப்பட்டது.[1] இதுவே மொனாக்கோவிற்கு அடுத்தபடியாக, உலகில் அதிக சனத்தொகை அடர்த்தி கொண்ட தன்னாட்சி மிக்க நகர-அரசு ஆகும். சிங்கப்பூர் ஒரு பல்லின, பல்கலாசாரங்களைக் கொண்ட நாடாகும். இந்நாட்டின் மக்கள் தொகை பெரும்பான்மையாக சீனர்களையும் (75.9%), அடுத்த படியாக ஒரு கணிசமான அளவு மலேயர்களையும் (12.1%) மற்றும் சிறுபான்மை இந்தியர்களையும் (9.1%) கொண்டுள்ளது.[2] மேலும் ஐரோப்பிய, ஆசிய வம்சாவளி மக்களும் இங்கு வாழ்கின்றனர். இங்கு மலாயர்கள் தான் உள்நாட்டு சமூகமாகக் கருதப்படுகிறார்கள். இவர்களில் அநேகமானோர் 1945 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தோனேசியாவிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் இடம்பெயர்ந்து வந்த மக்களின் வம்சாவளியினராவர் .[3][4][5][6]
இங்கு பரவலாக மகாயான பௌத்த மதம் பின்பற்றப்பட்டாலும், இதைப் பெரும்பான்மைச் சமயமாகக் கருதமுடியாது. கணிசமான அளவு மக்கள் இசுலாம், கிறித்துவம், இந்து சமயம், சீக்கியம், நாத்திகம் ஆகிய கொள்கைகளை பின்பற்றுபவர்கள். வருடாந்த மொத்த சனத்தொகை வளர்ச்சி வீதம் 2012 ஆம் வருடம் சுமார் 2.5% ஆகப் பதியப்பட்டது.[7]
சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய் மொழி ஆகும். மேலும் ஆங்கிலம், மாண்டரின் மொழி, தமிழ் மொழி ஆகியன உத்தியோகபூர்வ மொழிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஆங்கில மொழி மிக முக்கியமான மொழியாகக் கருதப்படுவதோடு பாடசாலைகளில் கட்டாய மொழியாகவும் கற்பிக்கப்படுகின்றது.[8][9]
சிங்கப்பூர் மக்கள் தொகையின் முழு கருவள வீதம் (total fertility rate) 2011 ஆம் ஆண்டில் 1.2 ஆக காணப்பட்டது. சீனர்கள், மலேயர்கள் மற்றும் இந்தியர்களின் கருவள வீதம் முறையே 1.08, 1.64 மற்றும் 1.09 ஆக பதியப்பட்டது. 2010 ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின் படி, மலேயர்களின் கருவள வீதமானது சீனர்கள் மற்றும் இந்தியர்களின் கருவள வீதத்தை விட 70% அதிகமாக காணப்பட்டது.[10] சிங்கப்பூர் தனது நாட்டின் கருவள வீதத்தினை 2.1 ஆக அதிகரிப்பதற்குப் பல வருடங்களாக நடவடிக்கை எடுத்து வருகின்றது.[2]