குருதி ஊட்டக்குறை இதய நோய்
From Wikipedia, the free encyclopedia
குருதியூட்டக்குறை இதய நோய் (Ischaemic heart disease) அல்லது முடியுருநாடி இதய நோய்[1] என்பது இதயத் தசைக்குக் குருதியோட்டம் குறைவாகச் செல்வதால் ஏற்படும் நோய்களின் தொகுப்பாகும். இந்நோயின் அனைத்து வகைகளிலும் முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு நோய்க் காரணியாகத் திகழ்கின்றதெனினும் இவை உண்டாக வேறு காரணங்களும் உண்டு. இந்நோய் வயது, புகைப்பிடித்தல், உயர் குருதிக் கொலசுடிரோல், நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்ற சில காரணிகளால் பெருகுகின்றது; இது பெண்களை விட ஆண்களிலேயே பொதுவாகக் காணப்படுகின்றது, இந்நோய் மரபணு வழியாகவும் கடத்தப்படலாம். ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கு இந்நோய் இருந்தால் பிள்ளைகளும் பாதிக்கப்படும் இடர்ப்பாடு உள்ளது.
குருதியூட்டக்குறை இதய நோய் | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | இதயவியல், pediatric cardiac surgery |
ஐ.சி.டி.-10 | I20.-I25. |
ஐ.சி.டி.-9 | 410-414 |
நோய்களின் தரவுத்தளம் | 8695 |
ஈமெடிசின் | med/1568 |
பேசியண்ட் ஐ.இ | குருதி ஊட்டக்குறை இதய நோய் |
ம.பா.த | D017202 |
குருதியூட்டக்குறை இதய நோய் உண்டாவதற்கான மிக முக்கியமான காரணி முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு ஆகும். இதனால் குறிப்பிட்ட இதயத் தசைப் பகுதிக்கு குருதி விநியோகம் குறைகின்றது. மேலும் கூழ்மத்தடிப்பு சிதையும் போது அங்கிருந்து குருதி வெளியேறி குருதியுறைமை ஏற்பட்டு முடியுரு நாடியை அடைப்பதனால் நிலையில்லா மார்பு நெரிப்பு மற்றும் இதயத்தசை இறப்பு ஆகிய கடிய முடியுருக் கூட்டறிகுறிகள் ஏற்படுகின்றன.[2]
குருதியூட்டக்குறையால் மார்பு நெரிப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. நிலையான மார்பு நெரிப்பு மற்றும் நிலையில்லா மார்பு நெரிப்பு என்று மார்பு நெரிப்பு மேலும் வகுக்கப்படுகின்றது. இவற்றில் அறிகுறிகள் முற்றிலும் அற்ற நிலை தொடங்கி நோய் அறிகுறிகள் தீவிரம் பெறும் நிலை வரை நோய் காணப்படலாம், மேலும் இவை ஒருவரது செயற்பாட்டிலும் தங்கி உள்ளது; சிலருக்கு ஓய்விலேயே நோய் அறிகுறிகள் தென்படும் அதேவேளையில் வேறு சிலருக்கு சிறிய வேலைகளின் போது அல்லது பெரிய வேலைகளின் போது மட்டும் ஏற்படலாம்.