குரு
From Wikipedia, the free encyclopedia
குரு ஆனவர் கூறும் தர்மம் மற்றும் வேத புராணங்களின் கூற்று போன்றவற்றை வாழ்வின் முக்கிய வழியாக ஏற்று கொண்டு அதன் படி நடப்பவருக்கு குரு என்றும் உயர்ந்தவராகவே தெரிவார். நாம் அனைவரும் கூட குரு ஆவோம் அன்றாட வாழ்வில் எதாவது ஒன்றை போதிப்பதும் பயில்வதும் நம் இயல்பாக உள்ளது. குரு எங்கயும் இருப்பார் .குரு (சமசுகிருதம்: गुरु) என்பது பெரும்பாலும் இந்து, சமணம், பௌத்தம் மற்றும் சீக்கிய சமய மரபுகளில் ஒரு அறிவு துறையில் "வழிகாட்டி ஆசிரியர், நிபுணர்" என்பவரைக் குறிக்கிறது.[1] குரு தன் குருகுலத்தில் உள்ள சீடர்களுக்கு ஆன்மீக மற்றும் பல்துறை அறிவை போதிப்பவர்[2].குருச்சேத்திரப் போர்க் களத்தில் ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு குருவாக இருந்து பகவத் கீதையை புகட்டியதின் வாயிலாக குருவின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.
அறிவுடன் கூடிய சீடன் குருவிற்கு பணிவிடைகள் செய்வதன் மூலம், ஆத்ம தத்துவத்தை நன்கு அறிந்த மகாத்மாவும் ஞானியுமான குருவிடமிருந்து பிரம்ம தத்துவத்தை அறிந்து கொள்வான்.[3]
ஆன்மீக குரு வை சற்குரு என்றும், பரமகுரு என்றும்,சுவாமி என்றும், சத்புருஷன் என்றும் அழைப்பர்.[4].குருவை பின்பற்றுபவர்கள் சீடர்கள் ஆவர். குரு தனது (குரு குலத்தில்) சீடர்களுடன் தங்கி ஆன்மீகக் கல்வி அறிவை புகட்டுவார். குருவின் பரம்பரை தனது சீடர்களால் நீட்சி அடைகிறது. அதனை குரு பரம்பரை என்பர்.
இந்து சமய மரபுகளில் குருவானவர், சுருதி (வேதம்) எனப்படும் வேத மந்திரங்கள், வேதாந்தம், ஸ்மிருதி எனப்படும் பிரம்ம சூத்திரம், யோகா, சமயச் சடங்குகள், கர்ம யோகம், தாந்திரீகம், பக்தி, ஞான யோகம், இலக்கணம், மீமாம்சை, நியாயம், இதிகாசம் மற்றும் புராணங்கள் போன்ற ஆன்மீக கல்வியுடன் அரசியல் நுட்பம், அரச தந்திரம், அரச தர்மம், சோதிடம், வானவியல், ஆயுர்வேத மருத்துவம், சமூகச் சட்டங்கள் போன்ற வாழ்க்கைக்கு தேவையான விடயங்களையும் சீடர்களுக்கு வாய்மொழியாக போதிப்பார். சீடர்களின் மனதில் உள்ள அறியாமை எனும் இருளை அகற்றி, ஞானம் எனும் ஒளியை ஏற்றுபவரே குரு ஆவார். [5]
இந்து சமயத்தில் குரு மிகவும் மதிக்கத் தக்கவராக விளங்குகிறார். மனுஸ்மிருதி குருவை, சீடனின் பெற்றோர்களுக்கு நிகராகவே போற்றுகிறது.
இந்திய பண்பாட்டின்படி, குருவை அடையாத ஒருவனை அனாதை அல்லது அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று குறிப்பிடுகிறது. அனாதை என்பதற்கு சமசுகிருதம் மொழியில் குருவை அடையாதவன் என்பர். குரு சீடனுக்கு அறிவை வழங்குபவர் மட்டும் அல்ல தீட்சையும் வழங்குபவர் ஆவார். மேலும் சீடனுக்கு ஆத்ம ஞானத்தை ஊட்டி விதேக முக்திஅடைய வழிகாட்டுபவர் குருவே.
ஆன்மீக குருவின் முக்கியத்துவம் உபநிடதங்களில் அதிகமாக காணப்படுகிறது. உபநிடதங்களில் குருவானவர் இறைவனுக்கு நிகராக போற்றப்படுகிறார். குருவின் நினைவை போற்றும் விதமாக குரு பூர்ணிமா விழா ஆண்டு தோறும் சீடர்கள் கொண்டாடுகிறார்கள். மேலும் குருமார்கள் மழைக்காலத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்கின்றனர்.[6] [7]