ஏதெனியன் சனநாயகம்
கிமு 5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளில் ஏதென்சில் நிலவிய சனநாயக ஆட்சி / From Wikipedia, the free encyclopedia
ஏதெனியன் சனநாயகம் (Athenian democracy) என்பது ஏதென்சு நகரம் மற்றும் அட்டிகாவைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய ஏதென்சு கிரேக்க நகர அரசில் (பொலிஸ் என அறியப்படுகிறது) கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் உருவானது ஆகும். ஏதென்சு மிகவும் பிரபலமான பண்டைய கிரேக்க சனநாயக நகர அரசு என்றாலும், இதுவே முதல் சனநாயக அரசு அல்ல; ஏதென்சுக்கு முன் பல நகர அரசுகள் இதேபோன்ற சனநாயக அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டிருந்தன.[1][2] கி.மு. 4-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரேக்க நகர அரசுகளில் பாதிக்கும் மேற்பட்டவை சனநாயக நாடுகளாக இருந்திருக்கலாம் என்று ஓபர் (2015) குறிப்பிடுகிறார்.[3]
ஏதென்சின் அரசாட்சி முறைமையானது சட்டம் மற்றும் நிர்வாக மசோதாக்களை நடைமுறைப்படுத்தியது. இதில் பங்கேற்பவர்கள் வயதுவந்த, ஆண் குடிமக்களாக (அதாவது, அடிமைகளுக்கும், பெண்களுக்கும், பல தலைமுறைகளாக ஏதென்சில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி இல்லை.) இருப்பர். மொத்த மக்கள் தொகையில் குடியுரிமை உடையோர் எண்ணிக்கை "அநேகமாக 30 விழுக்காட்டிற்கு மேல் இல்லை".[4]
சோலோன் ( கி.மு. 594-இல்), கிளீசுத்தனீசு ( கி.மு. 508-07-இல்), எபியால்ட்டீசு (கி.மு. 462-இல்) ஆகியோர் ஏதெனிய சனநாயகத்தின் வளர்ச்சியில் பங்களித்தனர். குடிமக்களை அவர்களின் பொருளாதார நிலையை அடிப்படையாக கொள்ளாமல், அவர்கள் வாழ்ந்த இடத்தின் அடிப்படையில் பத்து குழுக்களாக அமைப்பதன் மூலம் பிரபுக்களின் வரம்பற்ற அதிகாரத்தை கிளீசுத்தனீசு உடைத்தார்.[5] ஏதென்சில் நீண்ட காலம் பொறுப்பில் நீடித்த சனநாயகத் தலைவர் பெரிக்கிளீசு ஆவார். அவரது மரணத்திற்குப் பிறகு, பெலோபொன்னேசியப் போரின் முடிவில் சிலவர் ஆட்சிக்குழுவின் புரட்சிகளால் ஏதெனியன் சனநாயகம் இரண்டு முறை குறைந்த காலம் இல்லாமல் ஆக்கப்பட்டது. இது யூக்ளிட்சின் தலைமையில் மீட்டெடுக்கப்பட்ட பிறகு ஓரளவு மாற்றியமைக்கப்பட்டது; சனநாயக அமைப்பு குறித்த மிக விரிவான தரவுகள் நான்காம்-நூற்றாண்டைச் சார்ந்தவை. கி.மு. 322-இல் மாசிடோனியர்களால் சனநாயகம் ஒடுக்கப்பட்டது. ஏதெனியன் நிர்வாக அமைப்புகள் பின்னர் புத்துயிர் பெற்றன. ஆனால் அவை உண்மையான சனநாயகத்திற்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தன என்பது விவாதத்திற்குரியது.