இரப்பர் பற்றவைப்பு
இயற்கை இரப்பரை பலபடியாக மாற்ரும் வேதிச் செயல்முறை / From Wikipedia, the free encyclopedia
வலுப்பதனீட்டல் அல்லது 'இரப்பர் பற்றவைப்பு '(Vulcanization) என்பது இயற்கை இரப்பர் அல்லது இரப்பர் போன்ற பலபடிகளை மேலும் நீடித்துழைக்கக்கூடிய பொருட்களாக மாற்ற கந்தகம் மற்றும் அதையொத்த குறை களையக்கூடிய அல்லது விரைவுபடுத்திப் பொருட்களை சேர்த்து உருவாக்கும் ஒரு வேதியச் செயல்முறை ஆகும்.[1] இத்தகைய சேர்க்கைப் பொருட்கள் தனித்த பலபடி தொடர்களை ஒன்றோடொன்று குறுக்கு இணைப்புகளால் இணைத்து மேலும் வலிமையான பொருட்களாக மாற்றம் செய்கின்றன.[2][3] இரப்பர் பற்றவைப்பு செய்யப்பட்ட பொருட்கள் குறைவான ஒட்டும் தன்மை மற்றும் மேம்பட்ட இயந்திரவியல் பண்புகளையும் கொண்டவையாக உள்ளன. பற்றவைப்பு செய்யப்பட்ட இழை என்பது செல்லுலோசானது துத்தநாக குளோரைடு கரைசலுடன் வினைப்படுத்தப்பட்டு பெறப்பட்ட குறுக்க இணைப்புடன் கூடிய செல்லுலோசு இழைகளைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தை ஆகும்.
இரப்பரைப் பதப்படுத்தும் செயல்முறையானது வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், நவீன இரப்பர் பற்றவைப்பு செயல்முறைக்கான பெயரானது உரோமானிய நெருப்புக் கடவுளாகக் கருதப்படும் வல்கன் பெயரிலிருந்து உருவாக்கப்பட்டது. பத்தொன்பதாம் நுாற்றாண்டில் சார்லசு குட்இயர் என்பவராலேயே நவீன இரப்பா் பற்றவைப்பு செயல்முறையானது வடிவமைக்கப்பட்டது. இன்று, பலவிதமான இரப்பர் பற்றவைப்புப் பொருட்கள், உதாரணமாக, டயர்கள், குழாய்கள், சுமை ஊர்வுப் பட்டை, காலணியின் அடிப்பாகங்கள் ஆகிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சில நேரங்களில் பற்றவைக்கப்பட்ட இரப்பரானது, எபொனைட் அல்லது பொதுவான பழைய வல்கனைட் என்ற வணிகவியல் பெயருடன் விற்பனை செய்யப்பட்டது.