இதய அடைப்பிதழ்
From Wikipedia, the free encyclopedia
இதய அடைப்பிதழ் (இதய தடுக்கிதழ், இதய ஒரதர், heart valve) என்பது இதயத்துள் காணப்படும், குருதியை ஒரு வழியே மட்டும் புகவிடும், திறந்து மூடும் வலிமையான மென்சவ்வுத் துண்டுகளான அமைப்பாகும், இத்தகைய மெல்லிய இழைய துண்டுகள் ‘இதழ்’ அல்லது ‘கூர்’ என அழைக்கப்படுகிறது.
மனிதன் உட்பட பாலூட்டிகளில் நான்கு வகையான அடைப்பிதழ்கள் காணப்படுகின்றன, இவை ஒவ்வொரு இதய அறையினதும் வெளிக் கதவு போன்று அமைந்துள்ளன, இவற்றின் தொழிற்பாட்டினால் முன்னே பாயும் குருதி பின்னோக்கிப் பாய்தல் தடுக்கப்படுகிறது.[1][2][3]
இதயத்தில் காணப்படும் நான்கு வகையான அடைப்பிதழ்களாவன:[4]
- இரண்டு இதய மேல்-கீழ் அறை அடைப்பிதழ் (ஏட்ரியோவென்றிக்குளர் – AV); இவை இடது, வலது இதயத்தின் மேல், கீழ் அறைகளைக்கிடையே அமைந்துள்ளன. இடது புறத்தில் காணப்படுவது இருகூர் அடைப்பிதழ் அல்லது மைட்ரல் அடைப்பிதழ் என்றும், வலது புறத்தில் காணப்படுவது முக்கூர் அடைப்பிதழ் என்றும் அழைக்கப்படுகிறது.
- இரண்டு அரைமதி அடைப்பிதழ்கள்; பெருநாடி அடைப்பிதழ், நுரையீரல் அடைப்பிதழ் ஆகியன இதயத்தில் இருந்து தமனிகள் வெளியேறும் அமைவிடத்தில் காணப்படுகின்றன.
இதய அடைப்பிதழ்கள் சரியாக உரிய நேரத்தில் மூடப்படாமல் தொழிற்படுமாயின், குருதி ஒரு வழியே முன்னோக்கிப் பாய்வது தடைப்பட்டு, வந்தவழியே (பிழையான திசையில்) பின்னோக்கிப் பாயும், இந்த நிலை பின்னொழுக்கு எனப்படும்.