அறிவொளிக் காலம்
From Wikipedia, the free encyclopedia
வார்ப்புரு:Classicism
அறிவொளி (அறிவொளிக் காலம் அல்லது பகுத்தறிவுக் காலம் எனவும் அறியப்படுகிறது;[1] பிரெஞ்சு மொழி: le Siècle des Lumières, lit. 'ஒளியின் நூற்றாண்டு'; மற்றும் இடாய்ச்சு மொழி: Aufklärung, 'அறிவொளி')[2] என்பது ஒரு அறிவார்ந்த மற்றும் தத்துவ இயக்கமாகும். இவ்வியக்கம், தத்துவத்தின் நூற்றாண்டு என விளிக்கப்படும் 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் சிந்தனைக் கருத்துக்களில் தாக்கம் செலுத்தியது.[3] அறிவொளியானது ஒரு கருத்தின் அதிகாரபூர்வமாக்கலுக்கும் ஏற்புடைத் தன்மைக்கும் முதன்மை மூலமாக பகுத்தாராய்தலை அடிப்படையாகக் கொண்ட பன்முகச் சிந்தனைகளை உள்ளடக்கியிருந்தது. மேலும் இது விடுதலை, முன்னேற்றம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், அரசியலமைப்புக்குட்பட்ட அரசாங்கம் மற்றும் அரசுக்கும் திருச்சபைக்குமிடையிலான வலுவேறாக்கல் போன்ற முற்போக்குச் சிந்தனைகளை கொண்டிருந்தது.[4][5] பிரான்சில், les Lumièresன் மையக் கோட்பாடுகளாக தனிமனித விடுதலை மற்றும் சமயச் சகிப்புத்தன்மை என்பன விளங்கின. மேலும், சர்வாதிகார முடியாட்சி மற்றும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் சமயக் கட்டுப்பாடுகளை இவ்வியக்கம் எதிர்த்தது. அறிவொளி மூலம் அறிவியல் முறை மற்றும் குறுக்கியல் பார்வை என்பன வலியுறுத்தப்பட்டதோடு, மதப் பழமைவாதத்தை கேள்விக்குட்படுத்தும் போக்கும் அதிகரித்தது. இப் போக்கு அறிதலுக்கான துணிச்சல் (Sapere aude) எனும் சொற்பதத்தால் வருணிக்கப்பட்டது.[6]
பிரெஞ்சு வரலாற்றாசிரியர்கள், 14ம் லூயி இறந்த ஆண்டான 1715 மற்றும் பிரெஞ்சுப் புரட்சி ஆரம்பமான 1789 ஆகியவற்றுக்கிடையிலான காலப்பகுதியை அறிவொளிக்காலமாக வரையறுக்கின்றனர். சில அண்மைய வரலாற்றாய்வாளர்கள் அறிவியல் புரட்சி ஆரம்பமான 1620களை அறிவொளிக் காலத்தின் ஆரம்பமாகக் கருதுகின்றனர். இக்காலப்பகுதியின் Les philosophes (பிரெஞ்சு மொழியில் 'தத்துவஞானிகள்') அறிவியல் கல்விக்கூடங்கள், கழகங்கள், இலக்கியக் கூடங்கள், கோப்பிக் கூடங்கள் ஆகிய இடங்களில் கூட்டங்கள் நடத்துவதன் ஊடாகவும், அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களினூடாகவும் தமது கருத்துக்களைப் பரப்பினர். அறிவொளிக்கருத்துக்கள் முடியரசினதும் திருச்சபையினதும் அதிகாரங்களை நலிவடையச் செய்ததோடு, 18ம் மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அரசியற் புரட்சிகளுக்கும் வழிகோலியது. தாராண்மைவாதம் மற்றும் புதுச் செவ்வியல் வாதம் போன்ற 19ம் நூற்றாண்டின் பல்வேறு இயக்கங்கள் அறிவொளிக் கருத்துக்களைத் தமது அடிப்படையாகவும் அறிவுசார் மரபுரிமையாகவும் கொண்டிருந்தன.[7]
அறிவொளிக்காலத்தின் அடுத்த படியாக அறிவியல் புரட்சி உருவாகியதோடு அது அறிவொளிக் காலத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.[8] முன்னைய மெய்யியலறிஞர்களான பிரான்சிசு பேகன், ரெனெ தெக்காட்டு, சோன் லொக் மற்றும் பரூச் இசுபினோசா போன்றோரின் கருத்துக்கள் அறிவொளியில் தாக்கம் செலுத்தியுள்ளன.[9] அறிவொளிக்காலத்தின் முக்கிய அறிஞர்களாக சீசரெ பெக்கரியா, வோல்டேர், டெனி டிட்ரோ, இழான் இழாக்கு ரூசோ, டேவிட் யூம், அடம் சிமித் மற்றும் இம்மானுவேல் கன்ட் ஆகியோரைக் குறிப்பிடலாம். ரசியாவின்சி 2ம் கத்தரீன், ஆசுத்திரியாவின் 2ம் யோசேப்பு மற்றும் பிரசியாவின் 2ம் பிரடெரிக் போன்ற ஐரோப்பிய ஆட்சியாளர்கள் அறிவொளிச் சிந்தனைகளை சமய மற்றும் அரசியல் சகிப்புத்தன்மை வடிவில் செயற்படுத்த முனைந்தனர். இது அறிவொளி முடியாட்சி என அறியப்பட்டது.[10] பெஞ்சமின் பிராங்கிளின் அடிக்கடி ஐரோப்பாவுக்குச் சென்று அங்கு நடைபெறும் அறிவியல் மற்றும் அரசியல் விவாதங்களில் சிறப்பான பங்கை வழங்கினார். மேலும், அங்கிருந்து புதிய கருத்துக்களை பிலதெல்பியாவுக்கு எடுத்து வந்தார். தோமசு செபர்சன் ஐரோப்பியக் கருத்துக்களை இறுக்கமாகப் பின்பற்றியதோடு, சில அறிவொளிக் கருத்துக்களை தமது 1776 விடுதலைப் பிரகடனத்திலும் உள்ளடக்கியிருந்தார். அவரது சகபாடியான சேம்சு மடிசன், 1787ல் ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பை வரையும் போது இக்கருத்துக்களை அதில் உள்ளடக்கினார்.[11]
அறிவொளிக்காலத்தின் செல்வாக்கு மிகுந்த வெளியீடு Encyclopédie (கலைக்களஞ்சியம்) ஆகும். 1751க்கும் 1772க்கும் இடையில் முப்பத்தைந்து பகுதிகளாக வெளியிடப்பட்ட இது, டெனி டிட்ரோ, லா லா ரோ டலம்பேர்ட் (1759 வரை) மற்றும் 150 அறிவியலாளர்கள் மற்றும் தத்துவஞானிகளை உள்ளடக்கிய ஒரு குழுவால் தொகுக்கப்பட்டிருந்தது. இது அறிவொளிக் கருத்துக்களை ஐரோப்பா மற்றும் ஏனைய இடங்களுக்கு பரப்ப உதவியாக இருந்தது.[12]
ஏனைய சிறந்த வெளியீடுகளாக வோல்டேரின் Dictionnaire philosophique (தத்துவ அகராதி; 1764) மற்றும் Letters on the English (ஆங்கிலத்திலான கடிதம்) (1733); ரூசோவின் Discourse on Inequality (ஏற்றத்தாழ்வு தொடர்பான உரையாடல்) (1754) மற்றும் The Social Contract (சமூக ஒப்பந்தம்) (1762); அடம் சிமித்தின் The Wealth of Nations (நாடுகளின் செல்வம்) (1776); மற்றும் மொன்டெசுகியூவின் Spirit of the Laws (சட்டங்களின் அடிப்படை) (1748) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அறிவொளிக் கருத்துக்கள் 1789ல் ஆரம்பமான பிரெஞ்சுப் புரட்சியை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தது. புரட்சியின் பின், புனைவியம் எனப்பட்ட ஒரு எதிர்க்கருத்து இயக்கம் அறிவொளிக் கருத்துக்களைப் பதிலீடு செய்தது.