அஞ்சல்
From Wikipedia, the free encyclopedia
அஞ்சல் (ஒலிப்புⓘ) அல்லது தபால் என்பது கடிதங்களையும் பிற பொருட்களையும் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு அனுப்புவதற்கான ஒரு முறை ஆகும். இம்முறையில், திறந்த அட்டைகளில் எழுதப்பட்ட கடிதங்கள், உறைகளில் மூடி ஒட்டப்பட்ட கடிதங்கள், சிறிய பொதியாகக் கட்டப்பட்ட பொருட்கள் என்பன உலகின் பல பாகங்களுக்கும் எடுத்துச் சென்று வழங்கப்படுகின்றன. அஞ்சல் முறைமையின் ஊடாக அனுப்பப்படும் எதுவும் பொதுவாக "அஞ்சல்" எனப்படுகின்றது.
அஞ்சல் சேவை அரசுகளினால் நடத்தப்படுவதாக அல்லது தனியாரினால் நடத்தப்படுவதாக இருக்கலாம். ஆனால், தனியார் அஞ்சல் சேவைகள் பெரும்பாலும் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு அமையவே செயல்படுகின்றன. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து தேசிய அஞ்சல் சேவைகள் அரசுகளின் தனியுரிமையாகவே செயற்பட்டன. இச் சேவைகள் முன்னதாகவே கட்டணம் பெற்றுப் பொருட்களை அனுப்பி வந்தன. கட்டணம் செலுத்தியமைக்கான சான்றாகக் கடிதங்கள் அல்லது பொதிகளில் அஞ்சல்தலைகள் ஒட்டப்படுவது வழக்கம். பெருமளவிலான அஞ்சல்களை அனுப்பும்போது அஞ்சல்தலைகளுக்குப் பதிலாக அஞ்சல்மானிகள் மூலம் அச்சுக்குறிகள் இடப்படுவதும் உண்டு. அஞ்சல் முறைமை பல வேளைகளில் கடிதங்கள் அனுப்புவது மட்டுமன்றி வேறு பல செயற்பாடுகளிலும் ஈடுபடுவது உண்டு. சில நாடுகளில் அஞ்சல் சேவையானது தந்திச் சேவை, தொலைபேசிச் சேவை ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக உள்ளது. வேறு சில நாடுகளில் அஞ்சல் சேவை, மக்கள் பணத்தைச் சேமிப்பதற்கான சேமிப்புக் கணக்குச் சேவைகளை வழங்குகின்றன. அடையாள அட்டைகளை வழங்குதல், கடவுச் சீட்டுகளுக்கான விண்ணப்பங்களைப் பெறுதல் என்பவற்றையும் சில நாடுகளில் அஞ்சல் சேவைகள் கையாளுகின்றன.[1][2][3]