வானிலையாலழிதல்
பாறை சிதைவடையும் முறை. / From Wikipedia, the free encyclopedia
வானிலை காரணிகளால் பாறை படிப்படியாகச் சிதைவடைந்து மண் மற்றும் கனியங்கள் தோன்றும் செயற்பாட்டுத் தொடர் வானிலையாலழிதல் (Weathering) எனப்படும். வானிலையாலழிதல் வளிமண்டலத்தின் பௌதீகக் காரணிகள், இரசாயனக் காரணிகள் மற்றும் உயிரியல் காரணிகளால் நிகழலாம். மண்ணரிப்பு நிகழும்போது, துணிக்கைகள் அரித்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால் வானிலையாலழிதலில் துணிக்கைகள் இடம்பெயர்வதில்லை.
பாறைகளில் அல்லது மண்ணில் ஏற்படும் வானிலையாலழிதலானது, பௌதீக வானிலையாலழிதல் மற்றும் இரசாயன வானிலையாலழிதல் என இரண்டு வகைப்படுத்தப்படும். வானியல் காரணிகளான வெப்பம், நீர், பனிக்கட்டி (Ice) மற்றும் அமுக்கம் என்பன நேரடியாக தாக்கம் செலுத்துவதால் பௌதீக வானிலையாலழிதல் நிகழ்கிறது. அமில மழை போன்ற நேரடி இரசாயன காரணிகளாலும், விலங்குகளின் சிறுநீர், எச்சம் போன்ற உயிரியல்சார் காரணிகளினால் ஏற்படும் சிதைவுகளின் இரசாயன தாக்கங்களாலும் இரசாயன வானிலையாலழிதல் நிகழும்[1]. உயிரியல் சார்ந்த காரணிகளால் ஏற்படும் வானிலையாலழிதல் சிலசமயம் உயிரியல் வானிலையாலழிதல் என்றும் அழைக்கப்படுவதனால், மூன்று வகையான வானிலையாலழிதலாகப் பிரிக்கப்படுவதுமுண்டு.