பெனிட்டோ முசோலினியின் இறப்பு
From Wikipedia, the free encyclopedia
இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்து, பதவி நீக்கப்பட்ட பெனிட்டோ முசோலினியின் இறப்பு இரண்டாம் உலகப் போரின் இறுதிக் காலப்பகுதியில், 1945 ஏப்ரல் 28 ஆம் தேதி நிகழ்ந்தது. இத்தாலியப் போராட்ட இயக்கத்தைச் சார்ந்தோரால் கியுலினோ டி மெசெக்ரா என்னும் சிறிய ஊரில் அவர் கொல்லப்பட்டார். முதல் தகவல்களின்படி, "கேணல் வலேரியோ" என்னும் போர்ப் பெயரைக் (nom de guerre) கொண்ட கம்யூனிசச் சார்பாளரான வால்ட்டர் ஆடிசியோ என்பவரே முசோலிலினியைச் சுட்டுக் கொன்றதாகச் சொல்லப்பட்டது.[1] எனினும், போர் முடிந்த காலத்தில் இருந்து, முசோலினி இறந்த சூழ்நிலை, அவரைக் கொன்றவர் ஆகியவை தொடர்பில் குழப்பமும், முரண்பாடுகளும், சர்ச்சைகளும் நிலவின.
1940 ஆம் ஆண்டில், முசோலினி தனது நாட்டை, நாசி செருமனியின் சார்பாக இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தினார். ஆனால், விரைவிலேயே அவரது படைகள் தோல்வியைச் சந்தித்தன. 1943 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில், வடக்கு இத்தாலியில் இருந்த செருமன் பொம்மை அரசின் தலைவர் என்ற அளவுக்கு இறங்கிவிட்டார். தெற்கில் நேசநாட்டுப் படைகளின் முன்னேற்றத்தையும், உள்நாட்டில் கலகக்காரர்களையும், அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1945 ஏப்ரலில், நேசநாட்டுப் படைகள் வடக்கு இத்தாலியில் இருந்த கடைசி செருமன் பாதுகாப்பு அரண்களூடாக முன்னேறியதுடன், நகரங்களில் இடம்பெற்ற கலகக்காரர்களின் எழுச்சியும், முசோலினியை எதுவும் செய்யமுடியாதவர் ஆக்கின. ஏப்ரல் 25 ஆம் தேதி அவர் மிலானுக்குத் தப்பி ஓடி, அங்கிருந்து சுவிசு எல்லைக்குச் செல்ல முயற்சி செய்தார். அவரும் அவருடைய வைப்பாட்டியான கிளாரிட்டா பெட்டாச்சியும் ஏப்ரல் 25 ஆம் தேதி டொங்கோ என்னும் ஊருக்கு அண்மையில் கோமோ ஏரியில் பிடிபட்டனர். அடுத்தநாள் பிற்பகலில், அடொல்ப் இட்லர் தற்கொலை செய்துகொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், முசோலினியும், பெட்டாச்சியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முசோலினியினதும், பெட்டாச்சியினதும் உடல்களை மிலானுக்கு எடுத்துச் சென்று "பியாசாலே லொரெட்டோ" (Piazzale Loreto) என்னும் புறநகர்ச் சதுக்கத்தில் வைத்தனர். கோபங்கொண்ட பெரிய மக்கள் கூட்டம் அவ்வுடல்களைப் பல வழிகளிலும் அவமதித்தனர். பின்னர் அங்கிருந்த இரும்பு வளை ஒன்றில் இருந்து அவ்வுடல்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டனர். முதலில் முசோலினியின் உடல் அடையாளம் இல்லாத புதைகுழி ஒன்றில் புதைக்கப்பட்டது. 1946 இல் பாசிச ஆதரவாளர்கள் அவரது உடலைத் தோண்டி எடுத்துச் சென்றனர். நான்கு மாதங்களுக்குப் பின்னர் அதிகாரிகள் அவ்வுடலைக் கண்டுபிடித்து 11 ஆண்டுகள் மறைத்து வைத்திருந்தனர். 1957 இல் முசோலினியின் உடல் எச்சங்கள் அவரது சொந்த ஊரான பிறிடப்பியோவில் உள்ள குடும்ப அடக்கத்தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது சமாதி தற்போது புதிய-பாசிசவாதிகளின் யாத்திரைத் தலமாகியுள்ளது. அவர்கள் முசோலினியின் இறப்பை ஒவ்வொரு ஆண்டும் ஊர்வலங்களுடன் நினைவுகூருகின்றனர்.