புனைவியம்
From Wikipedia, the free encyclopedia
புனைவியம் (romanticism) என்பது, 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் உருவாகி வளர்ந்த கலை, இலக்கிய, அறிவுசார் இயக்கம் ஆகும். பெரும்பாலான பகுதிகளில் இது 1800க்கும், 1850க்கும் இடையில் உச்சநிலையில் இருந்தது. ஓரளவுக்கு இது தொழிற் புரட்சிக்கான ஒரு எதிர் வினையாகக் கருதப்படுகிறது.[1] அத்துடன், அறிவொளிக் காலத்தின், உயர்குடி ஆதிக்கத் தன்மையோடு கூடிய சமூக, அரசியல் நெறிமுறைகளுக்கு எதிரானதாகவும், இயற்கையை அறிவியலுக்கு அமைய வழிப்படுத்துவதை மறுதலிக்கும் ஒன்றாகவும் இது விளங்கியது.[2] காட்சிக் கலைகள், இசை, இலக்கியம், போன்ற துறைகளில் இது மிகவும் வலுவானதாக இருந்ததுடன், வரலாற்றுவரைவியல்,[3] கல்வி,[4] இயற்கை அறிவியல்[5] ஆகிய துறைகளிலும் இது குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியது. அரசியலிலும் இதன் தாக்கம் குறிப்பிடத் தக்கதாகவும், சிக்கலானதாகவும் இருந்தது. புனைவியம் உயர்நிலையில் இருந்த காலத்தில் இது தாராண்மையியத்துடனும், பருமாற்றவியத்துடனும் தொடர்புள்ளதாக இருந்தது. நீண்டகால நோக்கில் தேசியவாதத்தின் வளர்ச்சியில் இதன் தாக்கம் கூடிய முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது எனலாம்.
அழகியல் அனுபவத்தின் உண்மையான மூலங்களாக வலுவான உணர்வுகளை இந்த இயக்கம் முன்னிலைப்படுத்தியது. குறிப்பாகக் கட்டுப்படுத்தப்படாத இயற்கையையும், அதன் கவர்ச்சியான பண்புகளையும் எதிர்கொள்ளும்போது அனுபவிக்கும் அச்சம், திகில், பிரமிப்பு போன்ற உணர்வுகள்மீது புனைவியம் கூடிய அழுத்தம் கொடுத்தது. இது நாட்டுப்புறக் கலைகளுக்கு ஒரு கண்ணியமான இடத்தை வழங்கியதுடன், தன்னிச்சைத் தன்மையை ஒரு விரும்பத்தக்க இயல்பாகவும் ஆக்கியது.
உள்ளுணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அறிவொளிக்காலத்தின் பகுத்தறிவியத்துக்கு மேலாக மதித்த செருமனியின் இசுட்டூம் உன்ட் டிரங் (Sturm und Drang) இயக்கம் புனைவியத்துக்கு அடிப்படைகளை வழங்கியிருந்தாலும், பிரெஞ்சுப் புரட்சியின் கருத்தியல்களினதும் நிகழ்வுகளினதும் பின்னணியிலேயே புனைவியமும், எதிர் அறிவொளியமும் உருவாகின. தொழிற் புரட்சியின் வரம்புகளும் புனைவியத்தின்மீது செல்வாக்குச் செலுத்தின. புனைவியம் நவீன யதார்த்தத்தில் இருந்து தப்புவதற்கான முயற்சி என்ற கருத்தும் உண்டு. 19 ஆம் நூற்றாண்டில் பின்னரைப் பகுதியில் யதார்த்தவியம் புனைவியத்துக்கு எதிரான ஒரு முனையாக எடுத்துக்கொள்ளப்பட்டது.