ஜார்ஜ் கோர்டன் பைரன்
From Wikipedia, the free encyclopedia
லார்டு பைரன் (Lord Byron) 22 சனவரி 1788 முதல் 19 ஏப்ரல் 1824 வரையிலான காலத்தில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் ஆவார். சியார்ச்சு கார்டன் பைரன், ஆறாம் பாரன் பைரன் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். பிரிட்டனின் உயர்ப்படி பெருமகனார் என்ற சிறப்புக்குரிய இவர் ஓர் அரசியல்வாதியாகவும் செயல்பட்டார். கலை, இலக்கிய, அறிவுசார் புனைவிய இயக்கத்தின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். பிரிட்டனின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவராக பைரன் மதிக்கப்படுகிறார் [1]. இன்றும் இவரது கவிதைகள் பரவலாகப் படிக்கப்படுவனவாகவும், செல்வாக்கு மிக்கனவாகவும் திகழ்கின்றன. டான் யுவான் மற்றும் சைல்டி அரால்டின் புனிதப்பயணம் போன்ற நீண்ட விளக்கக் கவிதைகளும், அவள் அழகில் நடக்கிறாள் போன்ற குறுகிய தன்னுணர்ச்சிப் பாடல்களும் பைரனின் நன்கு அறியப்பட்ட ஆக்கங்களில் சிலவாகும்.
ஜார்ஜ் கோர்டன் பைரன் | |
---|---|
பிறப்பு | பைரன் பிரபு (1788-01-22)22 சனவரி 1788 இலண்டன், இங்கிலாந்து |
இறப்பு | 19 ஏப்ரல் 1824(1824-04-19) (அகவை 36) மெசோலொங்கி, கிரீஸ் |
தொழில் | கவிஞர், புரட்சியாளர் |
கையொப்பம் | |
ஐரோப்பா முழுவதும் பைரன் பயணம் செய்தார். , குறிப்பாக இத்தாலியில் வெனிசு நகரம், ரவென்னா நகரம் மற்றும் பிசா நகரம் ஆகிய இடங்களில் ஏழு ஆண்டுகள் வசித்துள்ளார். அங்கு அவரது நண்பரும் கவிஞருமான பெர்சி பைசே செல்லியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது [2]. ஓட்டோமான் பேரரசு எனப்படும் உதுமானியப் பேரரசுக்கு எதிரான கிரேக்க சுதந்திரப்போரில் பைரன் பிற்கால வாழ்வில் சில காலம் பங்கேற்றார். இதற்காக கிரேக்க மக்கள் பைரனை ஒரு தேசியத் தலைவராக மதித்தனர் [3]. 1824 ஆம் ஆண்டு மிசோலோங்கி நகராட்சியில் இருந்தபோது கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பைரன் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 36 ஆகும்.
பெரும்பாலும் பைரன் மிகவும் பகட்டானவர் என்றும் இழிவானவர் என்றும் விவரிக்கப்பட்டார். ஆடம்பரம், ஆண்கள் மற்றும் பெண்களுடன் ஏராளமான காதல்கள், வதந்திகள், கடன்கள், மோசமான தொடர்புகள் போன்றவைகளால் பைரனின் வாழ்வில் போற்றுதல்களும்ம் தூற்றுதல்களும் நிறைந்திருந்தன [4]. சட்டப்படியாக பைரனுக்கு இருந்த ஒரே மகளான அடா லோவெலசு மிகச்சிறந்த கணிப்பொறி நிரலாளர் என்று போற்றப்படுகிறார். சார்லசு பாப்பேச்சின் கனக்கீட்டு இயந்திரத்திற்குத் தேவையான குறிப்புகளைக் கொடுத்தவர் அடா லோவெலசு என்றும் கூறப்படுகிறது [5][6][7]. எலிசபெத் மெடோரா லெய்க், அலெக்ரா பைரன் உள்ளிட்டவர்கள் பைரனுக்கு சட்டவிரோதமாக பிறந்த குழந்தைகள் ஆவர். அலெக்ரா பைரன் குழந்தைப் பருவத்திலேயே இறந்து போனார்.