கோசுதானி ஆறு
ஆந்திர ஆறு / From Wikipedia, the free encyclopedia
கோசுதானி ஆறு (Gosthani River இந்தியாவில் உள்ள ஒரு நதி ஆகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அனந்தகிரி மலைகளில் உருவாகிறது. இதன் மூலத்திற்கு அருகில் அமைந்துள்ள போரா குகைகள் வழியாகப் பாய்கிறது. விசாகப்பட்டினம் நகரின் வழியாகப் பாயும் மிகப்பெரிய ஆறு இது. இது பீமுனிப்பட்டினம் அருகே ஒரு கழிமுகம் வழியாக வங்காள விரிகுடாவில் சேர்வதற்கு முன் 120 கி.மீ. தூரம் பயணிக்கிறது.[1][2] இதன் ஆற்றுப் படுகையானது இரண்டு கடலோர மாவட்டங்களான விசயநகரம் மற்றும் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. கோசுதானி ஒரு சிறிய ஆற்றுப் படுகை ஆகும். மொத்த வடிகால் பகுதி 2000க்கும் குறைவான சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ளது.[3] பள்ளத்தாக்கின் பெரும்பகுதி கோண்டலைட் பாறைகளால் மூடப்பட்டிருக்கும். விசாகப்பட்டினம் மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் சுமார் 3% கோசுதானி ஆற்றுப் படுகையில் உள்ளது.[4] இந்த ஆறு மானாவாரியாக உள்ளது. சராசரியாக ஆண்டிற்கு 110 செ.மீ. மழையைப் பெறுகிறது. பெரும்பாலான மழையானது தென்மேற்கு பருவமழைக் காலத்தில் கிடைக்கின்றது. பீமுனிப்பட்டினம் அருகே பல சிவப்பு மணல் மலைகள் உள்ளன. இங்கு கோசுதானி வங்காள விரிகுடாவுடன் இணைகிறது. இவை சம்பல் பள்ளத்தாக்குகளை நினைவூட்டுகின்றன. இவை ஆறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டெக்டோனிக் செயல்பாட்டைத் தொடர்ந்து ஆற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த நதி பீம்லியில் வங்காள விரிகுடாவில் இணைகிறது. இங்கு இது ஒரு முகத்துவாரத்தை உருவாக்குகிறது.[5]