மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
பிப்ரவரி 1945ல் இரண்டாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் மேற்கத்திய நேச நாடுகள் நாசி ஜெர்மனியை மேற்கிலிருந்து தாக்கின. கிழக்கிலிருந்து சோவியத் படைகள் ஜெர்மனியின் மீது படையெடுத்தன. இவ்விரு படையெடுப்புகளாலும் நிலை குலைந்து போன ஜெர்மனி மே 8, 1945ல் சரணடைந்தது. பிப்ரவரி 8ம் தேதி தொடங்கிய மேற்கத்திய படையெடுப்பின் இறுதியில் வடக்கே பால்டிக் கடல் முதல் தெற்கில் ஆஸ்திரியா வரை ஜெர்மானிய மூன்றாம் ரெய்க்கின் பெரும் பகுதிகள் மேற்கத்திய நாடுகள் வசமாகின. அமெரிக்க ராணுவ வரலாற்றில் இப்படையெடுப்பு மத்திய ஐரோப்பா போர்த்தொடர் என்று அழைக்கப்படுகிறது.
ஜெர்மானியப் படையெடுப்பு | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி | |||||||
ஏப்ரல் 29, 1945ல் கை கோர்க்கும் சோவியத், அமெரிக்கப் படைகள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் கனடா பிரான்சு | நாசி ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
டுவைட் டி. ஐசனாவர் பெர்னார்ட் மோண்ட்கோமரி ஆர்த்தர் டெட்டர் டிராஃப்போர்ட் லீக் மால்லரி ஒமார் பிராட்லி ஜேகப் டெவர்ஸ் | அடால்ஃப் ஹிட்லர் ஆல்பெர்ட் கெஸ்செல்ரிங் வால்டர் மோடல் † பவுல் ஹவுசர் யொஹான்னஸ் பிளாஸ்விட்ஸ் ஹைன்ரிச் ஹிம்லர் |
1944ம் ஆண்டு இறுதியில் ஐரோப்பிய மேற்குப் போர்க்களத்தில் வெற்றிபெற கடைசி முயற்சியாக ஹிடலர் பல்ஜ் தாக்குதலை மேற்கொண்டார். இரு மாதங்கள் கடும் சண்டைக்குப்பின் இத்தாக்குதல் தோல்வியடைந்தது; நாசி ஜெர்மனியின் படைகள் பலவீனமடைந்து விட்டன. பிப்ரவரி 1945ல் நேச நாட்டுப் படைகள் ஜெர்மனி மீது படையெடுத்தன. நேசநாட்டு ஐரோப்பிய தலைமைத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் ஜெர்மனியின் மேற்கெல்லையில் ஒரு பரந்த முனையெங்கும் தாக்கத் திட்டமிட்டார். மேற்கு களம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - 1) வடக்கில் வட கடலிலிருந்து கோல்ன் நகர் வரையான எல்லை ஃபீல்டு மார்ஷல் பெர்னார்ட் மோண்ட்கோமரியின் 21வது ஆர்மி குரூப்பின் பொறுப்பு 2) மத்தியில் மெயின்ஸ் நகரம் வரை லெப்டினன்ட் ஜெனரல் ஒமார் பிராட்லியின் 12வது அமெரிக்க ஆர்மி குரூப்பின் பொறுப்பு 3) தெற்கில் சுவிட்சர்லாந்து எல்லை வரை லெப்டினன்ட் ஜெனரல் ஜேகப் டெவர்சின் 6வது ஆர்மி குரூப்பின் பொறுப்பு.
பிப்ரவரி மாதம் வடக்கில் வெரிடபிள் மற்றும் கிரெனேட் நடவடிக்கைகள் மூலம் மியூசே ஆற்றுக்கும் ரைன் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதி கைப்பற்றப்பட்டது. மார்ச் மாதம் வடக்கிலும் மத்தியிலும், ரைன் ஆற்றைக் கடக்க சண்டைகள் நடந்தன. வடக்கில் பிளண்டர் நடவடிக்கை மூலம் ரைன் ஆறு கடக்கப் பட்டது. மத்திய முனையில் பிராட்லியின் படைகள் எளிதாக ரெமகன் என்ற இடத்தில் ஆற்றைக் கடந்து விட்டன. ஆற்றைக் கடந்த பின்னர் இந்த இரு பெரும் படைப்பிரிவுகளில் ஒரு பாதி ரூர் பகுதியைச் சுற்றி வளைக்கவும், மற்றொரு பாதி ஜெர்மனியின் உட்பகுதியைத் தாக்கவும் விரைந்தன. ஏப்ரல் 1ம் தேதி ரூர் இடைப்பகுதியிலிருந்த ஜெர்மானியப் படைகள் சுற்றி வளைக்கப்பட்டன. அடுத்த இருபது நாட்களுள் அப்பகுதி கைப்பற்றப்பட்டு சுமார் மூன்று லட்சம் ஜெர்மானியப் படை வீரர்கள் கைப்பற்றப்பட்டனர். மார்ச் 26ம் தேதி தெற்கு முனையிலும் 6வது ஆர்மி குரூப் ரைனைக் கடந்து ஆஸ்திரியா நோக்கி விரைந்தது.
ரூர் பகுதியில் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே, 12வது ஆர்மி குரூப்பின் ஒரு பிரிவு ஜெர்மனியின் மையப்பகுதியை நோக்கி முன்னேறியது. முதலில் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினைக் கைப்பற்ற வேண்டுமென்று திட்டமிட்டிருந்த ஐசனாவர் மார்ச் மாத இறுதியில் தன் இலக்கை மாற்றினார். பெர்லினை மேற்கத்தியப் படைகள் அடைவதற்கு முன்னர் சோவியத் படைகள் கிழக்கிலிருந்து கைப்பற்றி விடுமென்பதால் பெர்லினை நோக்கி முன்னேறாமல், லெய்ப்சிக் நகரைக் கைப்பற்றுவது ஐசனாவரின் இலக்கானது. ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் எல்பா ஆற்றின் கரையில் அமைந்திருந்த லெய்ப்சிக் நகரை நோக்கி 12வது ஆர்மி குரூப் முன்னேறியது. ஏப்ரல் 25ம் தேதி கிழக்கிலிருந்து முன்னேறிக் கொண்டிருந்த சோவியத் படைகளும் மேற்கிலிருந்து விரைந்து கொண்டிருந்த அமெரிக்கப்படைகளும் எல்பா ஆற்றருகே கை கோர்த்தன. எஞ்சியிருந்த ஜெர்மானியப் படைகள் இதனால் இரண்டாகத் துண்டிக்கப்பட்டன. ஏப்ரல் 29ம் தேதி 21வது ஆர்மி குரூப் எல்பா ஆற்றைக் கடந்தது. சோவியத் படைகளால் முற்றுகையிடப்பட்டிருந்த பெர்லின் நகரில் ஏப்ரல் 30ம் தேதி ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். அவருக்குப் பின் நாசி ஜெர்மனியின் பியூரரான அட்மிரல் கார்ல் டோனிட்ஸ் மே 8ம் தேதி ஜெர்மனி சரணடைவதாக அறிவித்தார். ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.