சிகாகோ
From Wikipedia, the free encyclopedia
சிகாகோ (Chicago, ஐபிஏ:ʃɪˈkɑːgoʊ) என்பது ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகராகும். மத்திய-மேற்கு அமெரிக்க நிலப்பகுதியில் அமைந்திருக்கும் இந்நகர், வணிகம், தொழில், கலாச்சாரம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. இந்நகரில், இதன் வரலாற்று சிறப்பினால் அமெரிக்காவின் இரண்டாம் நகர் என்று வர்ணிக்கப்படுகிறது. மக்கள்தொகையில், நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களை அடுத்து, சுமார் 3 மில்லியன் மக்கள்தொகையுடன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகராக விளங்குகிறது. சிகாகோ மாநகரை ஒட்டியுள்ள பெரும் புறநகர் பகுதி சிகாகோ நிலப்பரப்பு என்றே அழைக்கப்படுகிறது. இப்புறநகர் பகுதியில் சுமார் 9.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்[1].
சிகாகோ மாநகர் | |
---|---|
அடைபெயர்(கள்): காற்றாடும் மாநகர் (The Windy City), இரண்டாம் மாநகர் (The Second City), ஷி நகரம் (Chi Town), பெரிய தோள்களின் நகரம் (The City of Big Shoulders), நகரம் 312 (The 312) | |
குறிக்கோளுரை: "Urbs In Horto" (இலத்தீன்: பூங்காவிலுள்ள நகரம்), "I Will" (நான் செய்வேன்) | |
சிகாகோலாண்ட் மற்றும் இலினொயில் நகரின் அமைவிடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
மாநிலம் | இலினொய் |
குடியிருப்புப் பகுதிகள் (கவுண்டி) | குக் கவுண்டி |
நகராட்சி | மார்ச் 4, 1837 |
அரசு | |
• நகரத்தந்தை | ரிச்சர்ட் எம். டாலெ |
ஏற்றம் | 179 m (587 ft) |
மக்கள்தொகை (2005) | |
• நகரம் | 28,42,518 |
• நகர்ப்புறம் | 87,11,000 |
• பெருநகர் | 94,43,356 |
நேர வலயம் | ஒசநே-6 (CST) |
• கோடை (பசேநே) | ஒசநே-5 (CDT) |
இணையதளம் | egov.cityofchicago.org |
இந்நகர் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மிச்சிகன் ஏரியின் கரையில் அமைந்துள்ளது. உலகின் பெரிய 25 மாநகர்களில் ஒன்றான, இந்நகர்[2], 1833 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 1837 இல் நகராக உயர்த்தபட்டது. அக்காலகட்டத்தில், அமெரிக்க உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்திற்கு பெரிதும் உபயோகப்படுத்தப்பட்ட அமெரிக்கப் பேரேரிகளுக்கும், மிசிசிப்பி ஆற்றிக்கும் இடையே அமைந்த, போக்குவரத்து மையமாக வளர்ந்தது. இதன்பிறகு, மிகக்குறுகிய காலகட்டத்திலேயே நாட்டின் மிகச்சிறந்த வணிக மையமாகவும், தொழில் நகராகவும், சுற்றுலாத்தலமாகவும் வளர்ச்சி கண்டது. இன்றைய காலத்தில், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 44.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இம்மாநகருக்கு வருகை தருகின்றனர்[3].
சிகாகோ மாநகர் 1920-1930களில், உலகின் மிகக்கொடிய குற்றவாளிகளின் வாழ்விடமாகவும்(அல் கபுன்), ஊழல் அரசியல்வாதிகளின் கோட்டையாகவும் நோக்கப்பட்டது. சிகாகோ மாநகர் 1960-1970களில் இரயில்வே சார்ந்த கருவிகள் தயாரிக்கும் தொழிலில் முதன்மைபெற்று விளங்கியது.