கால்நடை வளர்ப்பு
From Wikipedia, the free encyclopedia
கால்நடை வளர்ப்பு (ஆங்கிலம்: Animal husbandry) என்பது வேளாண்மைத் துறையில், உணவு, கம்பளம், உடல்வலுப் பயன்பாடு என்பவற்றை நோக்கமாகக் கொண்டு, ஆடு, மாடு, குதிரை, மீன், கோழி, வாத்து போன்ற விலங்குகளையும் பறவைகளையும் வளர்ப்பதைக் குறிக்கும். கால்நடைகள் வளர்ப்பது, வாழ்வாதார மட்டத்திலோ அல்லது பெருமளவு இலாபம் தரக்கூடிய வகையிலோ நடைபெறலாம். கால்நடை வளர்ப்பு என்பது நவீன வேளாண்மைத் துறையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக இருக்கிறது. மனித சமூகம் வேட்டை - உணவு திரட்டலை வாழ்க்கை முறையாகக் கொண்டிருந்த நிலையிலிருந்து வேளாண்மை நிலைக்கு மாறிய காலத்திலிருந்து கால்நடை வளர்ப்பு இடம்பெற்றுவருகிறது.
கால்நடை வளர்ப்பு, முதல் பயிர்கள் விளைவிக்க தொடங்கும் முன்பில் இருந்தே, முதற் கற்காலப் புரட்சி தொடங்கியதில் இருந்தே, விலங்குகள் கிமு 13,000 அளவில் வீட்டினமாக்கப்பட்ட நெடுங்கால வரலாற்றைக் கொண்டதாகும். பண்டைய எகுபதியைப் போன்ற மிக முந்தைய நாகரிகங்கள் காலத்தில், மாடு, செம்மறியாடு, வெள்ளாடுகள், பன்றி கள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டன.
பழைய உலகக் கால்நடைகள் புதிய உலகத்துக்குக் கொணர்ந்த கொலம்பியப் பரிமாற்றத்தின்போது பல பெருநிலை மாற்றங்கள் ஏற்பட்டன. பிறகு, பிரித்தானிய வேளாண் புரட்சி பதினெட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்தபோது, நெடுந்திமில் காளைகளும் இலிங்கன்வகைச் செம்மறியாடுகளும் இராபர்ட் பேக்கர் எனும் உழவரால் கூடுதலாக இறைச்சியும் பாலும் கம்பளி முடிகளும் தரும்படி வேகமாக மேம்படுத்தப்பட்டன.
உலகின் பல பகுதிகளில் குதிரை, நீர் எருமை, இலாமா ஒட்டகம், முயல், கினி பன்றி போன்ற பலவகைக் கால்நடைகள் நடைமுறைக்கு வந்தன. இன்னும் சில பகுதிகளில் பூச்சி வளர்ப்பும் மீன்கள், மெல்லுடலிகள், ஓட்டுடலிகளும் வளர்க்கும் நீரியல் பண்ணைகளும் பரவலாகின.
கிடைக்கும் நிலங்களுக்கு ஏற்பத் தகவமைந்து, தற்கால வேளாண்விளைச்சல் அமைப்புகளும் கால்நடை வளர்ப்புப் பண்ணைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. உலகின் மிக வளர்ந்த நாடுகளில் செறிநிலை விலங்குப் பண்ணைகளை விட வாழ்தகு வேளாண்மை வடிவமே வெற்றி கண்டு வருகிறது. இங்கு உயரடர்த்திப் பண்ணைகளில் பன்றி இறைச்சிக் கால்நடைகளும் பிராயிலர் இல்லங்களில் அல்லதுஅடுக்குப் பண்ணைகளில் ஆயிரக் கணக்கான கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. வளங்குறைந்த மேட்டு நிலங்களில், தாமே பரவலான இடங்களில் மேய்ந்து வளரும்படி விலங்குகள் செறிவாக மேயவிடப்படுகின்றன.
பன்றிகள், கோழிகளைத் தவிர,பெரும்பாலான கால்நடைகள் தாவரவுண்ணிகளாக அமைகின்றன. முன்னவை அனைத்துண்ணிகளாகும். மாடு, ஆடு போன்ற அசைபோடும் விலங்குகள் புல்லுண்ணத் தகவமைந்துள்ளன; அவை வெளியே விட்டு மேயவிடப்படுகின்றன அல்லது கூலங்களைப் போன்ற வளமான புரத உணவு முழுமையாகவோ, பகுதியாகவோ ஊட்டப்படுகின்றன. பன்றிகளும் கோழியினப் பறவைகளும் தாம் மேயும் கூலங்களைச் செரிக்கவல்லனவாக இல்லை. எனவே, அவற்றுக்கும் பதப்படுத்திய கூலங்களும் பிற உயர்வள உணவுகளும் தேவைப்படுகின்றன.