மார்ஷல் திட்டம்
இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கு ஐரோப்பாவிற்கு உதவி வழங்கிய ஐக்கிய அமெரிக்கத் திட்டம் / From Wikipedia, the free encyclopedia
மார்ஷல் திட்டம் என்பது 1948ஆம் ஆண்டு மேற்கு ஐரோப்பாவிற்கு வெளிநாட்டு உதவி வழங்க ஐக்கிய அமெரிக்காவால் தொடங்கப்பட்ட ஒரு நடவடிக்கை ஆகும். இத்திட்டத்தின் அலுவல் பூர்வமான பெயர் ஐரோப்பிய மீட்புத் திட்டம் என்பது ஆகும். ஐக்கிய அமெரிக்கா ஐஅ$13 பில்லியன் (₹92,970.8 கோடி)க்கும் மேற்பட்ட உதவியை இரண்டாம் உலகப் போரின் முடிவில் மேற்கு ஐரோப்பியப் பொருளாதாரங்களுக்கு பொருளாதார மீட்புத் திட்டத்தின் மூலம் கொடுத்தது. இத்திட்டம் முன்னர் முன்மொழியப்பட்ட மார்கந்தவு திட்டத்திற்குப் பதிலாக ஏப்ரல் 3, 1948 அன்று தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்பட்டது.[1] ஐக்கிய அமெரிக்காவின் குறிக்கோள்களானவை போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிர்மானிப்பது, வணிக அரண்களை நீக்குவது, உற்பத்தியை நவீனமாக்குவது, ஐரோப்பியச் செழிப்பை முன்னேற்றுவது, மற்றும் பொதுவுடைமையின் பரவலைத் தடுப்பது ஆகியவை ஆகும்.[2] மார்ஷல் திட்டம் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான தடைகளைக் குறைப்பது, ஐரோப்பியக் கண்டத்தின் பொருளாதார ஒன்றிணைவு ஆகியவற்றை முன்மொழிந்தது. அதேநேரத்தில் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் நவீன வணிக வழிமுறைகளை மேற்கொள்வது ஆகியவற்றை ஊக்குவித்தது.[3]