மர வரிசை
தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
மர வரிசை அல்லது மரக் கோடு (tree-line or timberline) வட துருவம், தென் துருவம், மற்றும் ஆல்ப்ஸ் போன்ற பிரதேசங்களில் மரங்கள் வளரக்கூடிய விளிம்புப் பகுதியாகும். மர வரிசைப் பகுதிகளுக்கு அப்பால் மரங்கள் வளர்வதில்லை. ஏனெனில் அப்பகுதியில் மிக மோசமான குளிர் அல்லது கடும் வெப்ப நிலை கொண்ட தட்பவெப்பம் கொண்டிருப்பதால் மரங்கள் வளர இயலாது.
சூழலியல் மற்றும் நிலவியல் கொள்கைகளின் படி, மர வரிசைகள் பல வகையாக விளக்கப்படுகிறது. அவைகள் முறையே:
- ஆர்க்டிக் மர வரிசை (Arctic tree-line) வடதுருவத்தின் தூர வடக்கில் அமைந்த தூந்திரப் பகுதிகளில் மிகக்கடுமையான குளிர்நிலையும், உறைபனிக்கட்டிகளும் கொண்டிருப்பதால் இப்பகுதிகளில் மரங்கள் வளர்வதில்லை. மாறாக பாசிகள், புல், புதர்கள் மட்டுமே வளரக்கூடியதாகும்.
- அண்டார்க்டிக்கா மர வரிசை (Antarctic tree-line) தென் துருவத்தின் தூர தெற்கில், மேட்டு நிலங்களில் வளரக்கூடிய மர வரிசையாகும்.
- அல்பைன் மர வரிசை (Alpine tree-line): ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின் மிக உயரமான பகுதிகள், ஆண்டு முழுவதும் கடும் குளிரும், தரைப்பகுதிகள் உறைபனி மூடிக் கொண்டிருப்பதால் இப்பகுதிகளில் மரங்கள் வளர்வதில்லை. மர வரிசைக்கு மேல் அமைந்த பகுதியில் ஆல்ப்ஸ் தட்பவெப்பம் நிலவுகிறது.
- வெளிப்பாடு மர வரிசை (Exposure tree-line): கடற்கரை பிரதேசங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மலைப்பகுதிகளில், வலுவான காற்று வீசுவதின் காரணமாக மரங்கள் வளர்வது தடை செய்யப்படுகிறது.
- பாலவன மர வரிசை (Desert tree-line): மிகமிகக் குறைவான மழை பொழியும் பாலைவனப் பகுதிகளில் மரங்கள் வளர்வதில்லை.
- நச்சு மர வரிசை (Toxic tree-line):எரிமலை குழம்புகள் வெளிப்படுத்தும் நச்சு வாயுக்கள், நச்சு வேதிப் பொருட்கள் சூழ்ந்த மலைப்பகுதிகளிலும், உப்பு நீர் கொண்ட சாக்கடல் மற்றும் பெரிய உப்பு ஏரி பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபாடுவதால் மரங்கள் வளர்வதில்லை.
- ஈரப்பத மர வரிசை (Wetland tree-line): உவர் நீர் கொண்ட சதுப்புநிலம் மற்றும் நீர்த்தடம் கொண்ட ஈரப்பதம் மிக்க நிலங்களில் ஆக்சிசன் மிகவும் குறைவாக இருப்பதால் மரங்கள் வளர்வதில்லை. உவர் நீரையும், குறைந்த ஆக்சிசனைக் கொண்டு வளரும் குட்டையான அலையாத்தித் தாவரங்கள் மட்டுமே இவ்வகையான நிலங்களில் வளரும் தன்மைக் கொண்டது.