பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி
From Wikipedia, the free encyclopedia
பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி அல்லது பொருளாதாரத் தனியுரிமை வலயம் (ஆங்கிலத்தில் exclusive economic zone) என்பது ஓர் நாடு, கடலை ஆய்வு செய்வது குறித்தும், காற்று மற்றும் நீரிலிருந்து வடிக்கப்படும் மின்சாரம் உள்ளிட்ட பல கடல் சார் வளங்களைப் பயன்படுத்துவது குறித்தும் பெறும் சிறப்பு உரிமைகளை வரையறுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் பரிந்துரைக்கும், கடல் மண்டலம்/பகுதி ஆகும். [1] இப்பகுதி கரையோர அடிக்கோட்டிலிருந்து வெளியே 200 கடல் மைல்கள் வரை நீளும். பெருவழக்கில் இப்பகுதி கண்டத் திட்டையும் உள்ளடக்கியதாகவும் வழங்கப்படுகின்றபோதும் இது பிராந்தியக் கடலையோ, 200 கடல் மைல்களுக்கப்பாலுள்ள கண்டத் திட்டையோ உள்ளடக்கியதன்று. பிராந்தியக் கடல் பகுதியில் ஒரு நாட்டிற்கு முழு இறைமை உண்டு, ஆனால் பொருளாதாரத் தனியுரிமைப் பகுதியிலோ கடற்பரப்பிற்குக் கீழுள்ளவற்றிற்கான இறைமை உரிமை மட்டுமே கடற்கரையோர நாட்டிற்கு வழங்கப்படும் . இப்பகுதியின் கடற்பரப்பு பன்னாட்டு நீர்ப்பரப்பாகவே கருதப்படும்.[2]