பைசல் பள்ளிவாசல்
From Wikipedia, the free encyclopedia
பைசல் பள்ளிவாசல் (உருது: فیصل مسجد) என்பது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு பள்ளிவாசல் ஆகும். இது இஸ்லாமாபாத்தில் உள்ள மார்கல்லா மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது, இந்த பள்ளிவாசல்ல் கற்காரை அடுக்களின் எட்டு பக்கங்களைக் கொண்ட ஒரு சமகால வடிவமைப்பைக் கொண்டுள்ளது மேலும் ஒரு பெடோயின் கூடார வடிவினால் ஈர்க்கப்பட்டு அதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.[1] இந்தப் பள்ளிவாசல் ஒரு முக்கிய சுற்றுலா இடமாகவும், இஸ்லாமிய கட்டிடக்கலையின் சமகால மற்றும் சிறப்புமிக்க அம்சமாக குறிப்பிடப்படுகிறது.[2][3]
1976 ஆம் ஆண்டில் சவூதி மன்னர் பைசல் வழங்கிய 120 மில்லியன் டாலர் நன்கொடையில் இப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன, அவரது பெயரே இப்பள்ளிக்கும் வழங்கப்பட்டுள்ளது. இப்பள்ளிக்கான வடிவமைப்பாக, துருக்கிய கட்டிடக் கலைஞர் வேதத் டலோக்கேயின் வழக்கத்திற்கு மாறான வடிவமைப்பு ஒரு பன்னாட்டு போட்டியின் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டது.[4] ஒரு வழக்கமான குவிமாடம் வடிவமைப்பு இல்லாமல், இப்பள்ளிவாசல் ஒரு பெடோயின் கூடாரம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது, அதைச் சுற்றி நான்கு 260 அடிகள் (79 m) உயரமான மினாராக்கள் உள்ளன. இந்த வடிவமைப்பில் ஓடு வடிவிலான எட்டு பக்கங்கள் கொண்ட சாய்வான கூரைகள், முக்கோண தொழுகை அரங்கின் மேல் அமைந்துள்ளன, இப்பள்ளிவாசலினுள் ஒரே நேரத்தில் 10,000 நபர்கள் தொழ முடியும்.[5]
இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பின் பரரப்பளவு 54,000 சதுர அடி ஆகும், இப்பள்ளிவாசல் இஸ்லாமாபாத்தின் நிலப்பரப்பில் முக்கியத்துவம் செலுத்துகிறது.[6]இமயமலையின் மேற்கு திசையில் உள்ள மார்கல்லா மலைகளின் அடிவாரத்தில், இஸ்லாமாபாத் நகரின் வடக்கு முனையிலுள்ள பைசல் நிழற்சாலையின் வடக்கு முனையில் அமைந்துள்ளது. இந்த உயர்ந்த நிலப்பரப்பின் பின்னணியில் அழகிய தேசிய பூங்கா அமைந்துள்ளது. பாக்கிஸ்தானின் மிகப்பெரிய பள்ளிவாசலான, பைசல் பள்ளி 1986 முதல் 1993 வரை உலகின் மிகப்பெரிய பள்ளிவாசலாக இருந்தது. இப்போது பைசல் பள்ளி தொழும் நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நான்காவது பெரிய பள்ளிவாசலாக உள்ளது.[7]