புகாரா வரலாறு
From Wikipedia, the free encyclopedia
புகாரா வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தொடங்குகிறது. இது தற்போது உசுபெக்கிசுத்தான் நாட்டின் புகாரா மாகாணத்தின் தலைநகராகும். பட்டுப் பாதையில் அமைந்துள்ள இந்நகரம் பன்னெடுங்காலமாகச் சிறப்பு மிக்க வணிக மையமாகவும், அறிவியற் களமாகவும், பண்பாட்டுக் கூடமாகவும், சமய நிலையமாகவும் இருந்துள்ளது. சாமானிய அரசின் பொற்காலத்தில் இஸ்லாமிய உலகில் மட்டுமல்லாது அக்காலத்தில் முழு உலகிலுமே மிகச் சிறந்த அறிவியற் களமாக புகாரா நகரம் மிளிர்ந்தது. ஏராளமான பள்ளிவாசல்கள், மத்ரசாக்கள் போன்றவற்றைக் கொண்டுள்ள புகாராவின் வரலாற்று மையம் உலக பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக யுனெசுக்கோவினாற் குறிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரசீக நாகரிகத்தின் முதன்மையான இடங்களுள் ஒன்றாக புகாரா திகழ்ந்தது. ஆறாம் நூற்றாண்டில், இந்நகரிற் துருக்கிய மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை மெள்ள மெள்ளக் கூடிச் செல்லலாயிற்று. இந்நகரின் கட்டிடக்கலையும் தொல்லியற் சிறப்பும் நடு ஆசியாவின் வரலாற்றினதும் கலைப் பண்பாட்டினதும் மிகச் சிறந்த தூண்களாகும். புகாராவும் அதன் சுற்றுப் புறமும் பன்னெடுங்காலமாகவே பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாகவே விளங்கியது. இந்நகரின் குடியிருப்பாளர்களின் தொடக்கம் இப்பகுதியில் ஆரியர்களின் குடியேற்ற காலத்துக்கு இட்டுச் செல்கிறது.