பித்தாகரசு
From Wikipedia, the free encyclopedia
பித்தாகரசு ஒரு அயோனியக் கிரேக்கக் கணிதவியலாளரும், பித்தாகரியனியம் என்னும் மத இயக்கம் ஒன்றின் நிறுவனரும் ஆவார். இவர் ஒரு சிறந்த கணிதவியலாளராகவும், அறிவியலாளராகவும் போற்றப்படுகிறார். ஆனால், சிலர் இவரது கணிதம், மெய்யியல் ஆகியவற்றுக்கான பங்களிப்புக் குறித்து ஐயம் எழுப்பியுள்ளனர். எரோடோட்டசு, இவரை கிரேக்கர்களுள் மிகத் தகுதி வாய்ந்த மெய்யியலாளர் எனப் புகழ்ந்துள்ளார். பித்தாகரசின் கேட்பாடுகள் பின்னாளில் வந்த பிளாட்டோவின் கோட்பாடுகளிலும் கிடைக்கப்படுகின்றன.
பித்தாகரசு | |
---|---|
பிறப்பு | கிமு 570 சாமோசு |
இறப்பு | கிமு 495 (வயது 75) மெடபாண்டம் |
முக்கிய ஆர்வங்கள் | கணிதம், இசை, அறிவியல், அரசியல். |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | பித்தாகரசு தேற்றம் |
இவர், அவரது பெயரைக்கொண்டு பெயரிடப்பட்ட பித்தாகரசு தேற்றத்துக்காக மிகவும் அறியப்பட்டவர். இவர் எண்களின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். கிமு ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இவர் மெய்யியல், மதம் பரப்பல் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். இவரது வாழ்க்கை, இவரது கருத்துக்கள் என்பன பற்றி மிகவும் குறைவாகவே தெரிய வந்துள்ளது. பித்தாகரசும் அவரது மாணவர்களும் எல்லாக் கருத்துருக்களும் கணிதத்துடன் தொடர்புள்ளவை என்றும், எண்களே இறுதி உண்மை என்றும், கணிதத்தினூடாக, எல்லாவற்றையும் எதிர்வுகூறவும், அளக்கவும் முடியும் எனவும் நம்பினர்.
தன்னை ஒரு மெய்யியலாளராகக் கூறிக்கொண்ட முதல் மனிதர் இவரே எனப்படுகின்றது. இவருடைய கருத்துக்கள் பிளேட்டோவிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவரது எழுத்துக்கள் எதுவும் இன்று கிடைக்காததால் இவரைப் பற்றி அதிகம் அறிய முடியாதுள்ளது. பித்தாகரஸ் மீது ஏற்றிச் சொல்லப்பட்ட சிறப்புகள் பல உண்மையில் இவரோடு பணியாற்றியோர் அல்லது இவரது மாணவர்களுக்கு உரியவையாக இருக்கலாம் எனவும் கூறப்படுவது உண்டு. சமோஸ் தீவில் பிறந்த இவர் தனது இளமைக்காலத்திலேயே அறிவைத் தேடி எகிப்து போன்ற பல பிரதேசங்களுக்கும் சென்றார்.