பயனர்:Shanthalan/கலிபோர்னியா யோசெமிட்டி வரலாறு
From Wikipedia, the free encyclopedia
சீயரா மிவோக், மோனோ, பாயிட் மற்றும் பிற பூர்வீக அமெரிக்கர்கள் ஆகிய இன மக்கள் 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக கலிஃபோர்னியாவின் மத்திய சீயரா நெவேடா பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஐரோப்பிய அமெரிக்கர்கள் முதலில் அங்கு வந்த போது அது யோசெமிட்டி தேசியப் பூங்கா என மாறியது. அதாவது இப்பெயர் யோசெமிட்டி பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்த ஆவனெச்சீ (Ahwahnechee) எனப்படும் மிவோக் மொழி பேசும் பூர்வீக அமெரிக்கர்களின் இனம் என்பதைக் குறிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட கலிஃபோர்னியா கோல்ட் ரஷ் என அழைக்கப்படும் அதிக மக்கள் குடியேற்ற நிகழ்வால், இப்பகுதியில் பூர்வீகரல்லாத மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பூர்வீக அமெரிக்கர்களுக்கும் வெள்ளை இனக் குடியேறிகளுக்கும் ஏற்பட்ட மோதல்களின் விளைவாக மாரிப்போசா போர் வெடித்தது. இந்த மோதலின் ஒரு பகுதியாக, குடியேறியான ஜேம்ஸ் சேவேஜ் (James Savage) சீஃப் டெனாயா தலைமையேற்று வழிநடத்திய ஆவனெச்சீ இனத்தினரை வெல்ல 1851 ஆம் ஆண்டில் யோசெமிட்டி பள்ளத்தாக்கிற்கு மாரிப்போசா படைப்பிரிவை அனுப்பினார். அந்தப் படைப்பிரிவினரின், குறிப்பாக டாக்டர். லஃபாயேட் பன்னலின் (Lafayette Bunnell) விவரிப்புகளினால் யோசெமிட்டி பள்ளத்தாக்கு ஒரு அழகிய அதிசயமான இடமாக பிரபலமானது.
1864 ஆம் ஆண்டில், யோசெமிட்டி பள்ளத்தாக்கு மற்றும் ஜயண்ட் செக்கோயா (Giant Sequoia) மரங்கள் நிறைந்த மாரிப்போசா சோலை ஆகியவற்றின் உரிமை கூட்டிணைய (ஃபெடரல்) அரசாங்கத்திடமிருந்து மாகாண அரசாங்கத்திற்கு மாறியது. யோசெமிட்டி முன்னோடியான கேலன் கிளார்க் (Galen Clark) பூங்காவின் முதல் பாதுகாவலரானார். யோசெமிட்டி பள்ளத்தாக்கின் சூழல்கள் மக்களுக்கு உகந்ததாகவும் விரும்பத்தக்கதாகவும் மாற்றப்பட்டு, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூங்காவிற்கு செல்லும் வசதி மேம்பட்டது (பூங்காவிற்கு வருவது எளிதானது). இயற்கையியலாளர் ஜான் மயுர் (John Muir) மற்றும் பிறர் இப்பகுதியின் அதீதப் பயன்பாட்டின் ஆபத்தை உணர்ந்தனர். அவர்களின் முயற்சிகள் 1890 ஆம் ஆண்டு யோசெமிட்டி தேசியப் பூங்காவை நிறுவ உதவின. யோசெமிட்டி பள்ளத்தாக்கும் மாரிப்போசா சோலையும் 1906 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவில் சேர்க்கப்பட்டன.
1891 முதல் 1914 ஆம் ஆண்டு வரை தேசியப் பூங்காவின் அதிகாரம் அமெரிக்க ஐக்கிய இராணுவத்திடம் இருந்தது, அதனையடுத்து பூங்காவின் அதிகாரம் படைத்துறை சாரா அமைப்பின் அதிகாரத்தின் கீழ் சிறிது காலம் இருந்தது. 1916 ஆம் ஆண்டில் பூங்காவின் நிர்வாகத்தை புதிதாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா சேவை கைக்கொண்டது. இக்காலக்கட்டத்தில் பூங்காவில் செய்யப்பட்ட மேம்பாடுள் மக்கள் வருகை அதிகரிப்பதற்கு உதவியது. மயுர் தலைமையிலான பாதுகாப்புவாதிகளும் (Preservationists) சீயரா சங்கமும் 1923 ஆம் ஆண்டு ஹெட்ச் ஹெட்ச்சி பள்ளத்தாக்கு (Hetch Hetchy Valley) நீர்த்தேக்ககமாக மாறுவதைத் தடுப்பதில் தோல்வியடைந்தன. 1964 ஆம் ஆண்டில், பூங்காவின் 89 சதவீதம் அதி பாதுகாப்புக்குட்பட்ட அடர்வனப் பகுதியில் ஒதுக்கி வைக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட பிற பகுதிகள் அடுத்த பூங்காவில் சேர்க்கப்பட்டன. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த யோசெமிட்டி ஃபயர்ஃபால் என்னும் பாரம்பரிய சடங்கு நிகழ்வு 20 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலிருந்து பிற்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் நிறுத்தப்பட்டது. அந்நிகழ்வின் போது, இரவில் பனிப்பாறைப் புள்ளிக்கு (கிளேசியர் பாயிண்ட்) அருகில் செங்குத்துப் பாறையிலிருந்து செஞ்சூடான கட்டைகளைத் தள்ளிவிடுவர். அத்துடன் சேர்த்து பூங்காவின் பாதுகாப்புக்கு ஒவ்வாத பிற செயல்பாடுகளும் கைவிடப்பட்டன.