பஞ்சாபி உடை
From Wikipedia, the free encyclopedia
பஞ்சாபி உடை என்பது, பஞ்சாப் பகுதி மக்கள் மரபுவழியாக அணிகின்ற உடைகளைக் குறிக்கும். பழங்காலத்தில் பஞ்சாப் மக்கள் பருத்தி உடைகளையே அணிந்தனர். ஆண், பெண் இரு பாலாரும் அணிந்த மேலாடைகள் முழங்கால் வரை நீண்டிருந்தன. சால்வை ஒன்றை இடது தோளுக்கு மேலாகவும், வலது தோளுக்குக் கீழாகவும் சுற்றி அணிந்தனர். இன்னொரு பெரிய துணியை ஒரு தோளுக்கு மேல் போட்டு முழங்காலை நோக்கித் தொங்க விடுவர். இரு பாலாரும் இடுப்பில் வேட்டி அணிவர்.[1] தற்கால பஞ்சாபி உடை இந்த அம்சங்களைத் தக்கவைத்திருந்தாலும், அதன் நீண்ட வரலாற்றுக் காலத்தில் பல ஆடை வடிவங்கள் உருவாகியுள்ளன.
19ம் நூற்றாண்டிலும், 20ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும், பஞ்சாப் பகுதியில் பருத்தித் தொழில் செழித்திருந்தது. லுங்கி, கெஸ், டாத்தாகி, மேலாடைகள், திரைச் சீலைகள், சுசி, துவாலைகள் போன்ற பல்வேறு விதமான துணிவகைகள் ஒசியார்ப்பூர், குர்தாசுப்பூர், பெசாவர், லாகூர், முல்த்தான், அம்ரித்சர், லூதியானா, ஜாங், சாப்பூர், சலந்தர், தில்லி, குர்காவோன், ரோத்தக், கர்னால், ரேவாரி, பானிப்பட் ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகின.[2] இந்தப் பருத்தித் தொழில் பஞ்சாபி உடைகளின் வளமைக்கு மேலும் வளம் சேர்த்தது. பஞ்சாப்பின் செழுமையான பண்பாடு அதன் உடைகளில் வெளிப்பட்டது.[3][4][5] வெவ்வேறு பண்டிகைகள், நிகழ்வுகள், விழாக்கள் என்பவற்றுக்கு ஏற்ப வெவ்வேறு வகையான உடைகள் அணியப்பட்டன.
வெவ்வேறு வகையான மரபுவழி உடைகளுடன், சிறப்பு வகை அணிகலன்களை அணிவதும் வழக்கம்.[6]