நீர்நில வாழ்வன
நீரிலும் நிலத்திலும் வாழும் மண்டை ஒட்டு உயிர்கள். / From Wikipedia, the free encyclopedia
நிலநீர் வாழிகள் அல்லது ஈரூடக வாழிகள் (இருவாழ்விகள் அல்லது நீர்நிலவாழ்வன; இலங்கை வழக்கு - ஈரூடகவாழிகள்; Amphibian) எனப்படுபவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல முதுகெலும்பி வகையைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். தவளை, தேரை, குருட்டுபுழு போன்றவை இருவாழ்விகள் ஆகும்.
நீர்நில வாழ்வன புதைப்படிவ காலம்:பிந்தை தெவோனிய ஊழி–முதல், 370–0 Ma | |
---|---|
மேலிருந்து, வலஞ்சுழியாக: செய்மவுரியா, மெக்சிகோவின் வளைவாழ் குருட்டுப் புழுக்கள், கீழை நியூட், இலைப்பச்சை நிற மரத்தவளை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
உட்குழுக்கள் | |
|
இவை குளிர் குருதி வகையைச் சேர்ந்த முதுகெலும்புடைய நான்கு கால்கள் அமைந்த இருவாழி வகுப்பைச் சார்ந்த விலங்குகள். தற்பொழுது வாழும் இருவாழ்விகள் அனைத்தும் இலிசாம்பிபியா எனும் உள்வகுப்பைச் சார்ந்தனவாகும். இவற்றின் வாழிடங்கள் தரைச் சூழல், புதர்ச் சூழல், மரச் சூழல், நன்னீர்ச் சூழல் ஆகிய சூழல் அமைப்புகளில் அமைகின்றன. இருவாழ்விகள் தம் வாழ்க்கைச் சுழற்சியை நீரில் வாழும் இளவுயிரிகளாகத் தொடங்குகின்றன. சில இருவாழ்விகள் இக்கட்டத்தைத் தவிர்க்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன.
செவுள்களால் மூச்சுயிர்க்கும் இந்த இளவுயிரிகள் நுரையீரலால் மூச்சுவிடும் வளருயிரி வடிவத்துக்கு உருமாற்றம் அடைகின்றன. இவை துணை மூச்சுயிர்க்கும் பரப்பாகத் தோலைப் பயன்படுத்துகின்றன. சில தரைவாழ் சலமாண்டர்களும் தவளைகளும் நுரையிரல் இல்லாமலே தம் தோலால் மட்டுமே மூச்சுயிர்க்கின்றன. இவை புறவடிவில் பல்லிகளைப் போலவுள்ளன என்றாலும், இவை பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன போல முட்டையிடும் விலங்குகளாகும். எனவே, இனப்பெருக்கத்துக்காக நீரூடகம் ஏதும் தேவையற்றவை. இவற்றின் சிக்கலான இனப்பெருக்கத் தேவையும் புரையுள்ள தோலும் இவற்றைச் சூழல்நிலைகாட்டிகளாக ஆக்குகின்றன; அண்மைப் பத்தாண்டுகளில் உலகெங்கும் இருவாழி இனங்களின் தொகை அருகிவருகிறது.
மிகப் பழைய தொடக்கநிலை இருவாழிகள் நுரையீரலும் என்புமுள்ளால் ஆன துடுப்பும் அமைந்த இதழ்த்துடுப்பு மீன்களில் இருந்து தோன்றிப் படிமலர்ந்தனவாகும். இந்தக் கூறுபாடுகள் நில வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்புக்கு உதவின. இருவாழிகள் கரியூழிக் காலத்திலும் பெர்மியக் காலத்திலும் பல்கிப் பெருகி உலகெங்கும் ஓங்கலான வீச்சுடன் வாழ்ந்தன; ஆனால், பின்னர் இவை ஊர்வனவற்றாலும் முதுகெலும்பிகளாலும் பதிலீடு செய்யப்பட்டன. கால அடைவில், இருவாழிகள் அளவில் சுருங்கி, பன்முக வளர்ச்சியையும் இழந்தன. இப்போது இலிசாம்பிபியா உள்வகுப்பு சார்ந்த இருவாழிகள் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளன.
புத்தியல்கால இருவாழிகள் மூன்று வரிசைகளில் அடங்குகின்றன; அவை தவளைகளும் தலைப்பிரட்டைகளும் அடங்கிய அனுரா வரிசை, சலமாண்டர்கள் அடங்கிய உரோடெலா வரிசை குருட்டுப்புழுக்கள் அடங்கிய அப்போடா வரிசை என்பனவாகும். இருவாழ்விகளில் தோராயமாக 7,000 இனங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தவளை இனங்கள் மட்டுமே 90% அளவுக்கு அமைந்துள்ளன. உலகிலேயே மிகச் சிறிய இருவாழியும் முதுகெலும்பியுமான பயெடோபிரிய்னே அமுவென்சிசு (Paedophryne amauensis) எனும் தவளை இனம் நியூகினியாவில் வாழ்கிறது. இதன் நீளம் 7.7 மிமீ ஆகும். மிக நீண்ட வாழும் இருவாழ்வியாக ஆந்திரியாசு தேவிதியானசு (Andrias davidianus) எனும் சீனப் பெருஞ்சலமாண்டர் அமைகிறது. இதன் நீளம் 1.8 மீ ஆகும். இதுவும் 9 மீ நீளமுள்ள அழிந்துவிட்ட பிரியோனோசச்சசு (Prionosuchus) எனும் பிரேசில் நாட்டில் இடைநிலைப் பெர்மியக் காலத்தில் வாழ்ந்த இருவாழியின் குறுவடிவமே ஆகும்.
இருவாழிகளின் உடல், தலை, உடம்பு எனும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை வழுவழுப்பான ஈரமான தோலைக் கொண்டிருக்கும். இவற்றின் இதயம் மூன்று அறைகளைக் (இரு மேலறைகளும் ஒரு கீழறை யும்) கொண்டுள்ளது.