நீரியல் வளர்ப்பு
From Wikipedia, the free encyclopedia
நீரியல் வளர்ப்பு அல்லது மண்ணில்லா வேளாண்மை (hydroponics) என்பது நீர் வேளாண்மையின் ஒரு துணைக்குழு ஆகும். மண் இல்லாமல் கனிம ஊட்டக்கூறுகளைக் கொண்ட நீர்ம வளர்ப்பூடகக் கரைசல்களைப் பயன்படுத்தி தாவரங்களை வளர்க்கும் ஒரு முறையாகும்.[1] நிலத்தடி செடிகளின் வேர்கள் மட்டுமே கனிம ஊட்டச்சத்துள்ள ஊடகத்தில் இருக்குமாறு வளர்க்கப்படுகிறது, அல்லது மண்ணிற்குப் பதிலாக மெருகேறிய பளிங்கு உருள்மணிகள் (perlite) அல்லது கூழாங்கற்கள் போன்ற செயலற்ற ஊடகத்தைப் பயன்படுத்தி வேர்களுக்கு பிடிப்பு தன்மை செய்யப்படுகிறது. மண்ணில்லா விவசாயத்திற்கான ஊட்டச்சத்துக்கள் பல்வேறு மூல ஆதாரங்களிலிருந்து கிடைக்கின்றது, ஊட்டச்சத்துக்களும் வீணடிக்கப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல், மீன் கழிவுகள், வாத்து கழிவுகள் அல்லது சாதாரண உரம் போன்ற பிற சத்துக்களை ஊட்ட சத்துக்களாக தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். தவிடு, தென்னை நார் படுக்கை, கம்பளி முதலான பொருள்களும் ஊடகங்களாக பயன்படுத்தலாம்.[2]
ஆராய்ச்சியாளர்கள் தாவரங்கள் தமக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை நீரில் கரைந்துள்ள சில கரிம மூலகங்களை உறுஞ்சிப் பெற்றுக்கொள்வதை 19 ஆம் நூற்றாண்டுகளில் கண்டறிந்தனர். உண்மையில் தாவரங்கள் உறுஞ்சிப் பயன்படுத்தக்கூடிய நிலையில் ஊட்டச்சத்துகளை மாற்றிப் பேணுவதே மண்ணின் செயற்பாடு ஆகும். ஆகவே நீரில் கரைந்த நிலையில் நேரடியாக தாவரத்தால் உறுஞ்சிப் பயன்படுத்தகூடிய நிலையிலான போசணை ஊடகத்தை வழங்குவது மண்ணின் பயன்பாட்டை இல்லாதாக்கும் என்ற சிந்தனையை வளர்த்தது.