நிக்கோலா தெஸ்லா
ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப் பொறியாளரும், மின்பொறியாளரும் ஆவார் / From Wikipedia, the free encyclopedia
நிக்கோலா தெசுலா (Nikola Tesla, செர்பிய மொழி: Никола Тесла, நிக்கொலா தெஸ்லா, 10 சூலை 1856 – 7 சனவரி 1943) ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப் பொறியாளரும், மின்பொறியாளரும் ஆவார். குரொவேசிய இராணுவ முன்னரங்கப்பகுதியில் உள்ள சிமில்ஜான் என்னும் இடத்தில் பிறந்த இவர் சேர்பிய இனத்தவர். ஆஸ்திரியப் பேரரசின் குடிமகனாக இருந்த இவர் பின்னாளில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.[2] 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான பங்களிப்புக்களினால் இவர் மிகவும் புகழ் பெற்றார். தெஸ்லாவின் காப்புரிமைகளும், கோட்பாட்டுகளும்; பன்னிலைமை மின் வழங்கல் முறைமைகள், மாறுதிசை மின்னோட்ட மோட்டார்கள் என்பன உள்ளிட்ட, தற்கால மாறுதிசை மின்னோட்ட மின் வலு முறைமைகளின் அடிப்படையாக அமைந்தன. இவற்றின் மூலம் இவர் இரண்டாம் தொழிற்புரட்சி ஒன்று உருவாவதற்கு உதவினார். இவரது சமகால வரலாற்றாளர்கள் இவரை "இயற்பியலின் தந்தை" என்றும், "இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர்" என்றும், "தற்கால மின்னியலின் காப்பாளர்" என்றும் போற்றினர்.
நிக்கொலா தெசுலா Nikola Tesla | |
---|---|
நிக்கொலா தெசுலா, அண். 1896 | |
பிறப்பு | (1856-07-10)10 சூலை 1856 சிமிலியான், ஆத்திரியப் பேரரசு (இன்றைய குரோவாசியாவில்) |
இறப்பு | 7 சனவரி 1943(1943-01-07) (அகவை 86) நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பிற்கான காரணம் | இதயநாடிக் குருதியுறைவு |
குடியுரிமை | ஆத்திரியர் (1856–1891) அமெரிக்கர் (1891–இறப்பு வரை) |
கல்வி | கிராசு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் |
பொறியியல் துறை | |
துறை | மின் பொறியியல், இயந்திரவியல் |
செயல் திட்டங்கள் | மாறுதிசை மின்னோட்டம் |
குறிப்பிடத்தக்க வடிவமைப்புகள் | தூண்டல் மின்னோடி சுழல் காந்தப்புலம் தெசுலா சுருள் வானலை தொலையியக்கி வாகனம் (நீர்மூழ்கிக் குண்டு)[1] |
விருதுகள் | எடிசம் பதக்கம் (1916) பாரிசு பல்கலைக்கழக பதக்கம் (1937) |
கையொப்பம் |
1894 இல் கம்பியில்லாத் தொடர்பு (வானொலி)[3] பற்றிய இவரது செயல்முறை விளக்கம், "மின்னோட்டப் போரில்" இவர் பக்கம் வெற்றிபெற்றது போன்ற நிகழ்வுகளுக்குப் பின்னர், அமெரிக்காவில் பணிபுரிந்த மின்பொறியாளர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக தெல்சா மதிக்கப்பட்டார்.[4] இவரது தொடக்கப் பணிகள் தற்கால மின் பொறியியலுக்கு முன்னோடியாக அமைந்ததுடன், இவருடைய பல கண்டுபிடிப்புக்கள், திருப்பங்களை உண்டாக்குமளவு முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்தன[5][6]. அக்கால அமெரிக்காவில், தெல்சாவின் புகழ் வேறெந்த கண்டுபிடிப்பாளர் அல்லது அறிவியலாளரின் புகழுக்குக் குறையாது இருந்தது. எனினும் இவரது கிறுக்குத்தனமான போக்கும்; அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து இவரது நம்பத்தகாத கூற்றுக்களும்; இவர் ஒரு பைத்திய அறிவியலாளர் என்னும் கருத்தை ஏற்படுத்தியது.[7][8]
நிகோலா டெஸ்லாவின் காப்புரிமைக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி, நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து உயர் அழுத்த மின்சாரம் தயார் செய்து பல மைல்கல் தூரத்திற்கு அதைக் கொண்டு செல்ல முடிந்தது. அமெரிக்கத் தொழிற்துறை வளர்ச்சியில் இவருக்குப் பெரும் பங்குண்டு. எக்ஸ்-ரே கதிர், டெஸ்லா சுருள் ஆகியவற்றில் இவர் செய்த கருவிகள் இன்றும் பயன்படுகின்றன.