நாசனோவ் இயக்குநீர்
From Wikipedia, the free encyclopedia
நாசனோவ் இயக்குநீர் (Nasonov pheromone) வேலைக்காரத் தேனீக்களால் சுரக்கப்படுகிறது. இந்த இயக்குநீரைக் காற்றில் கலக்க, தேனீக்கள் நாசனோவ் சுரப்பிகளைக் கொண்ட தங்கள் அடிவயிற்றை உயர்த்தி, தங்கள் இறக்கைகளைத் தீவிரமாக அசைத்து விசிறுகின்றன.[1]
நாசனோவ் இயக்குநீர் ஜெரானியோல், நெரோலிக் அமிலம், சிட்ரல் மற்றும் ஜெரானிக் அமிலம் உள்ளிட்ட பல்வேறு டெர்பெனாய்டுகளை உள்ளடக்கியது.[2] தேனீக்கள் தங்கள் கூட்டமைப்பு அல்லது கூட்டின் நுழைவாயிலைக் கண்டறிய இவற்றைப் பயன்படுத்துகின்றன. மேலும் இவை பூக்களில் இவற்றை வெளியிடுகின்றன. இதனால் மற்ற தேனீக்கள் இந்த மலர்களைத் தேடி வந்து தேன் உள்ளதை அறிகின்றன. உணவு தேடும் தேனீ கூட்டை விட்டு வெளியேறியதும், உணர்கொம்பில் உள்ள சிறப்பு உணர்திறன் உயிரணுவிலிருந்து தீவனத் தாவரங்களைக் கண்டறிந்து வேறுபடுத்துகிறது. இவை ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான வாசனை இரசாயன கலவையை வெளியிடுகின்றன. தேனீ வளர்ப்பவர் ஒரு கூட்டிலிருந்து சட்டங்களை வெளியே எடுக்கும்போது இவை கூட்டினுள் இருக்கும் வாசனையின் சமநிலையைச் சீர்குலைக்கும். இத்தகைய தேனீ கூட்டமைப்பு தன் வாசனை சமநிலையை மீண்டும் நிறுவ 48 மணிநேரம் வரை ஆகலாம்.
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நாசனோவ் இயக்குநீர், தேனீக் கூட்டம் ஆக்கிரமிக்கப்படாத கூட்டை அல்லது திரள் பிடிக்கும் பெட்டியில் ஈர்க்க பயன்படுத்தப்படுகிறது. செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட நாசனோவ் இயக்குநீர் 2:1 விகிதத்தில் சிட்ரல் மற்றும் ஜெரனியோலைக் கொண்டுள்ளது.
நாசனோவ் சுரப்பி முதன்முதலில் 1882-ல் உருசியா விலங்கியலாளர் நிகோலாய் விக்டோரோவிச் நாசனோவ் என்பவரால் விவரிக்கப்பட்டது.[3][4][5] இச்சுரப்பி வியர்வையைச் சுரப்பதாக நாசனோவ் கருதினார்.[6] ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரடெரிக் வில்லியம் லம்பேர்ட் சுலேடன் (மே 30, 1876 - 1921) என்பவர் 1901ஆம் ஆண்டில் முதன்முதலில் இச்சுரப்பி ஒரு இயக்குநீரை உற்பத்தி செய்கிறது என்று முன்மொழிந்தார்.[7]