தமிழக சிவன் கோயில்களின் சிற்பவியல்
From Wikipedia, the free encyclopedia
தமிழக சிவன் கோயில்களின் சிற்பவியல் (Iconography of Shiva temples in Tamil Nadu), சிவபெருமானின் முழுமுதற்கடவுளாகக் கொண்ட சைவ ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டமைந்ததாகும். ஆகமங்கள் மதக்கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்ததாகும்.[1] ஆகம விதிகளின்படி, கோயில் வழிபாடானது தென்னிந்தியாவில் பல்லவர் காலத்தில் (கி.பி.551-901) தொடங்கியது. சோழர் காலத்தில் (கி.பி.848-1279) முழுமையைப் பெற்றது.[2] சோழர் காலத்தில் கோயில்கள் இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தீவுகளிலும் கட்டப்பட்டன. கோயிலில் பல தெய்வங்களின் சிற்பங்களை அமைப்பதற்காகக் கோஷ்டங்கள் உள்ளன. முதலில் லிங்கத்திருமேனியும் தொடர்ந்து திருச்சுற்றில் பிற தெய்வ உருவ சிற்பங்களும், தொடர்ந்து சோழர் காலத்தில் பரிவார தெய்வங்களின் சிற்பங்கள் இடம் பெற ஆரம்பித்தன. தமிழகத்தில் சிவன் கோயில்களின் ஆகம விதிகளின் அடிப்படையில் கோஷ்டங்கள் அமைக்கும் முறையானது நவீன காலத்தில் தொடர்கிறது. முதன்மை சிற்பமான லிங்கத்திருமேனியைப் போலவே அனைத்து சிவன் கோயில்களிலும் விநாயகர் மற்றும் பார்வதியின் சிற்பங்கள் காணப்படுகின்றன. விழா நாட்களிலும், வழிபாட்டு முறையிலும் பெரும்பாலும் அனைத்துக் கோயில்களும் அதே முறையிலான நடைமுறையில் பின்பற்றப்படுகிறது. இதற்கு சில விதிவிலக்குகளும் உண்டு. தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் உள்ள முன்னீஸ்வரம் கோயில், கோனேஸ்வரம் கோயில், தென்னவர்மன் கோயில், கேதீஸ்வரம் கோயில், நகுலேஸ்வரம் கோயில் போன்ற பெரும்பாலான சிவன் கோயில்கள் திராவிட கட்டிடக்கலைப்பாணியில் அமைந்தவையாகும்.