ஜிம் கார்பெட்
From Wikipedia, the free encyclopedia
புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் (ஜூலை 25, 1875- ஏப்ரல் 19, 1955) இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனித்தாலில் பிறந்தவர். ஆங்கில மரபினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர். புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர்.[1]
ஜிம் கார்பெட் | |
---|---|
பிறப்பு | 25 சூலை 1875 நைனித்தால் |
இறப்பு | 19 ஏப்பிரல் 1955 (அகவை 79) நீயறி |
பணி | எழுத்தாளர், இராணுவ பணியாளர் |
பாணி | short novel |
இணையம் | http://www.respectance.com/JIM_CORBETT |
1907க்கும் 1935க்கும் இடையே, மனிதர்களைக் கொன்று வந்த 12 புலிகளை வேட்டையாடி குமாவுன் பகுதி மக்களால் காவல் தெய்வமாக கொண்டாடப்பட்டார். இந்த 12 புலிகளும் ஏறத்தாழ ஆயிரத்து முந்நூற்றூவரின் மரணத்துக்குக் காரணமானவை. இவர் முதன்முதலில் வேட்டையாடிய சம்பாவத் புலி மட்டும் 436 ஆவணப்படுத்தப்பட்ட மரணங்களுக்குக் காரணமானது. கடத்தல்காரன் ஒருவனால் சுடப்பட்ட நிலையில் இரைதேட வழியின்றி நானூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களைக் கொன்றிருந்த பானார் சிறுத்தைப்புலியையும் கொன்றார். கடைசியாக, இவர் தனது 63வது வயதில் ஆண்புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண்புலியைக் கொன்றார்.
பகல்நேரக் கொலைகளுக்குப் புலிகளும், இரவு நேரக் கொலைகளுக்குச் சிறுத்தைப்புலிகளும் காரணமாக இருந்ததை உற்றறிந்து எழுதினார். குறிப்பிட்ட விலங்கு அடிக்கடி மனிதர்களைக் கொன்று வருகிறது என்பது உறுதிப்பட்டாலொழிய அவ்விலங்கைக் கொல்ல மாட்டார். பெரும்பாலான தாக்குதல்கள் அவப்பேறாகவோ, குட்டிகளை ஆபத்திலிருந்து காக்க முயலும் தாயின் செயலாகவோ நிகழ்ந்தனவேயன்றி ஆள்தின்ன அலைவதால் நிகழ்ந்தவையல்ல என்று உறுதியாக நம்பினார்.
நல்ல உயரம் கொண்டிருந்த கார்பெட், புதருக்குள் மறைந்திருக்கும் புலியைக்கூட இருபதடிக்குள்ளாக நின்று எதிர்கொள்ளும் துணிச்சல் மிக்கவர். நடந்தேயும் தனியாளாகவும் செல்வதை விரும்பியவர்.
ஒன்றிய மாகாணப் பகுதிகளில் (இப்போது உத்தரப் பிரதேசம், உத்தராகண்டம்) கானுயிர்களைப் பேணுவதற்கான அமைப்பையும், அகில இந்திய கானுயிர்ப் பாதுகாப்புக் கலந்தாய்வுக் கூட்டத்தையும், இந்தியாவின் முதல் தேசியப் பூங்காவான ஹெய்லி தேசியப் பூங்காவையும் ஏற்படுத்துவதில் கார்பெட் பங்காற்றினார்.
1947க்குப் பிறகு தனது சகோதரி மேகியுடன் கென்யாவிலுள்ள நியேரியில், ஆலமர வகையைச் சார்ந்த ஒரு மரத்தில் கட்டப்பட்ட குடிசையில் வசிக்கத் தொடங்கிய கார்பெட் 19 ஏப்ரல் 1955ல் மாரடைப்பு காரணமாக உயிர் துறந்தார். இவரது இறுதி வார்த்தைகள்: "எப்போதும் துணிச்சலோடிரு.இவ்வுலகை பிறர் வாழ்வதற்கு இன்னும் மகிழ்ச்சிகூடிய இடமானதாக முயன்று மாற்று". இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தனது ஆறாவது நூலான மர உச்சிகள் (Tree Tops)-ஐ எழுதி முடித்திருந்தார்.
1957ல் ஹெய்லி தேசியப் பூங்கா கார்பெட் தேசியப் பூங்கா என பெயர் மாற்றப்பெற்றது.1968ல் புலியின் இதர ஐந்து துணைச்சிற்றினங்களில் ஒன்றுக்கு பாந்தெரா டைக்ரிஸ் கார்பெட்டி (panthera tigris carbetti) என்று இவரது பெயர் சூட்டப்பட்டது. இப்புலி பொதுவாக கார்பெட் புலி என்றே அழைக்கப்படுகிறது.