செங்கோணம்
From Wikipedia, the free encyclopedia
வடிவவியலில் செங்கோணம் (right angle) என்பது ஒரே நேர்கோட்டின் இரண்டு அரைப்பகுதிகளால் உண்டாகும் கோணத்தை இருசமக்கூறிடும் கோணமாகும். ஒரு நேர்கோட்டின் மீது முனைப்புள்ளி அமையுமாறு ஒரு கதிர் வரையப்படுகிறது என்க. அக்கதிர், மற்றும் அந்த கோடு இவற்றுக்கிடையே உண்டாகும் இரு அடுத்துள்ள கோணங்கள் சமமாக இருந்தால் அவ்விரண்டு கோணங்களும் செங்கோணங்களாக இருக்கும்.[1] சுழற்சியின் வாயிலாகக் கூறுவதென்றால் செங்கோணம் ஒரு முழு சுழற்சியில் கால் பகுதியாகும்.[2]
செங்கோணத்துடன் தொடர்புடைய முக்கிய வடிவவியல் கருத்துருக்கள் செங்குத்துக் கோடுகளும் செங்குத்துத் தன்மையுமாகும். செங்குத்துக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் புள்ளியில் உண்டாகும் கோணங்கள் செங்கோணங்களாக இருக்கும். ஒரு முக்கோணத்தின் ஒரு கோணம் செங்கோணமாக இருந்தால் அம்முக்கோணம் செங்கோண முக்கோணம் என அழைக்கப்படுகிறது.[3] முக்கோணவியலுக்கு அடிப்படையாக அமைவது செங்கோண முக்கோணங்களாகும்.[3]
செங்கோணத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் right angle என்பது angulus rectus என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் நேரான மொழிபெயர்ப்பாகும்; இதிலுள்ள rectus - செங்குத்தான என்பதைக் குறிக்கும்.