சூன் 2022 ஆப்கானித்தான் நிலநடுக்கம்
2022 ஆம் ஆண்டில் ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் / From Wikipedia, the free encyclopedia
சூன் 2022 ஆப்கானித்தான் நிலநடுக்கம் (June 2022 Afghanistan earthquake) ஆப்கானித்தான் நேரப்படி 2022 ஆம் ஆண்டு சூன் மாதம் 22 ஆம் தேதியன்று அதிகாலை 02:24 மணிக்கு ஆப்கானித்தானுக்கும் பாக்கித்தானுக்கும் இடையே உள்ள துராந்து எல்லைக்கோடு பகுதியில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு 6.2 என பதிவாகியது. இந்நிலநடுக்கம் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் 5.9 ரிக்டர்கள் அளவில் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. குறைந்தது 1000 பேர் பலியானதாகவும் 1500 பேர் காயம் அடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.[1] இந்தியாவின் சில பகுதிகள், பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத்து, கிழக்கு பஞ்சாப் மாகாணம் மற்றும் ஈரான்[2][3] போன்ற 500 கிலோமீட்டர் (310 மைல்) தொலைவில் வாழும் குறைந்தது 119 மில்லியன் மக்களால் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறியப்படுகிறது.[4]
நிலநடுக்க அளவு | 6.2 Mw 5.9 Mwb |
---|---|
ஆழம் | 10.0 km (6.2 mi) |
நிலநடுக்க மையம் | 33.092°N 69.514°E / 33.092; 69.514 |
வகை | செங்குத்துப் பிளவு |
அதிகபட்ச செறிவு | VII (Very strong) |
உயிரிழப்புகள் | 1,500 இறப்பு, 2,000 காயம் |
2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து, 25 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நிலநடுக்கம் அதன் அளவுடன் ஒப்பிடும்போது மிகவும் அழிவுகரமானதாக இருந்தது. நிலச்சரிவுகளுக்கு ஆளாகக்கூடிய அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆழமற்ற மையப்பகுதியும் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டப்படாத மரம் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட குறைந்த தரமான கட்டடங்களும் அதிக சேதத்திற்கான காரணங்களாக பார்க்கப்படுகின்றன.[5][6]