சுவாலைப் பரிசோதனை
From Wikipedia, the free encyclopedia
ஒரு மாதிரிப் பொருளிலுள்ள மூலகங்களை அல்லது உலோக அயன்களைக் கண்டறிவதற்கான ஒரு இரசாயனப் பரிசோதனையே சுவாலைப் பரிசோதனை எனப்படும். இதன் போது மூலகம் அல்லது சேர்வையின் சிறிதளவு மாதிரி அதிக வெப்பமுடைய நீலச் சுவாலைக்கு மேல் பிடிக்கப்படும். இதன் போது மாதிரியிலுள்ள மூலகத்துக்குரிய தனித்துவமான நிறம் கிடைக்கும். இது பொதுவாக உலோகங்களுக்கு நன்றாக வேலை செய்யும். பொதுவாக சுவாலைப் பரிசோதனையின் போது ஆய்வுகூடங்களில் பன்சன் சுடரடுப்பு பயன்படுத்தப்படும்.[1] மூலகத்தின் சுவாலைப் பரிசோதனையின் போது பெறப்படும் ஒளியைக் கோணலாக்கிப் பெறப்படும் நிறமாலை அம்மூலகத்தின் காலல் நிறமாலையை ஒத்திருக்கும். சுவாலைப் பரிசோதனையின் போது அணுக்கள் தனித்தனியாக்கப்பட்டு அருட்டப்படுகின்றன. அணுக்களிலுள்ள இலத்திரன்கள் சக்தியை உள்வாங்கி உயர்சக்திப் படிக்குச் சென்று மீண்டும் தாழ் சக்திப் படிக்குச் செல்லும் போது குறித்த அதிர்வெண்ணுடைய மின்காந்த அலைகளை வெளியிடுகின்றன. இவற்றில் கட்புலனுக்குரியவை நிறங்களாக எம் கண்களுக்குத் தென்படுகின்றன. இதன் போது வெளிவரும் ஒளியின் அதிர்வெண்கள் ஒவ்வொரு மூலகத்துக்கும் தனித்துவமானவையாக உள்ளன. எனவே வெளிவரும் ஒளியின் நிறத்தைக் கொண்டு மூலகத்தைக் கண்டறிய முடியும். சுவாலைப் பரிசோதனையின் போது வெளியிடப்படும் நிறம் சிவப்பெனில் சக்தி மாற்றம் குறைவாகும், ஊதா நிறமெனில் சக்தி மாற்றம் அதிகமாகும்.[2]